‘அறம்’ படத்தின் வெற்றியால், அதன் இரண்டாம் பாகத்துக்கு நயன்தாரா ஓகே சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
கோபி நயினார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘அறம்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘கத்தி’ படத்தின் கதை, கோபி நயினாரின் கதை என அப்போது பிரச்னை எழுந்தது. ‘கஜினி’ படத்தில் தன்னை ஐட்டம் டான்ஸராகக் காண்பித்ததால் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கோபத்தில் இருந்த நயன்தாரா, கோபி நயினாரை அழைத்துக் கதை கேட்டார். அந்தக் கதை பிடித்துப் போகவே, தன்னுடைய மேனேஜரைப் பினாமியாக்கி தானே தயாரிக்கவும் செய்தார்.
அரசை நோக்கி கேள்வி கேட்கும் சமூகக் கருத்துள்ள படமாக ‘அறம்’ வெளியாகியுள்ளது. கலெக்டராக நயன்தாரா நடிக்க, ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ், ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தால், நயன்தாரா மீது மக்களுக்கான மதிப்பு அதிகரித்திருக்கிறது. இதுவரை அழகுக்காக நயன்தாராவைக் கொண்டாடியவர்கள் கூட, அவரின் சமூகக் கருத்துக்காக மதிக்கத் தொடங்கிவிட்டனர். இதை, தியேட்டர் விசிட் போகும்போது நேரடியாகவே உணர்ந்து கொண்டார் நயன்.
மக்கள் தன்மீது வைத்துள்ள மதிப்பைக் காப்பாற்றுவதற்காக, ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவிற்கு வந்துள்ளாராம். கோபி நயினாரிடம் இரண்டாம் பாகத்துக்கு கதை எழுதச் சொன்னவர், முதல் பாகத்தைப் போலவே மேனேஜரைப் பினாமியாக்கி தானே தயாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். ஆனால், முதல் பாகம் வெற்றியடைந்ததைப் பார்த்து பலர் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்களாம். நயனுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்களாம். எல்லாவற்றையும் மறுத்த நயன், தானே தயாரிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.
மதிவதினி என்ற விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி பெயரைத் தன்னுடைய கேரக்டருக்கு பெயராகக் கொண்டுள்ள நயன்தாரா, கலெக்டர் பதவியைத் துறந்தபிறகு மக்களுடன் இணைந்து மக்கள் பிரச்னைக்காக எப்படிப் போராடுகிறார், அதற்கு ஆட்சியாளர்கள் என்ன மாதிரியெல்லாம் தொந்தரவு தருகிறார்கள் என்று இரண்டாம் பாகத்தின் கதை இருக்கும் என்கிறார்கள். ஆட்சியாளர்களின் தொந்தரவு தாங்க முடியாமல், தானே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாராம் நயன். ஆக, இரண்டாம் பாகத்தில் நயன்தாரா அரசியல்வாதியாக நடிப்பது உறுதி என்கிறார்கள்.