‘ஹீரோவையும், தயாரிப்பாளரையும் திருப்திப்படுத்தவே படம் இயக்க வேண்டியுள்ளது’ என இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சதீஷ், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘வேலைக்காரன்’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். நாளை இந்தப் படம் ரிலீஸாகிறது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மொத்தம் 159 நிமிடங்கள் 41 விநாடிகள், அதாவது 2 மணி நேரம் 39 நிமிடங்கள் 41 விநாடிகள் ரன்னிங் டைமைக் கொண்டுள்ளது இந்தப் படம்.
பிரமாண்டமான குப்பம் செட், சூப்பர் ஹிட்டான பாடல்கள், ‘அறம்’ படத்துக்குப் பிறகு ரிலீஸாகும் நயன்தாரா படம், சிவகார்த்திகேயனின் மாஸ் என எல்லாம் சேர்ந்து இந்தப் படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையே இந்தப் படத்துக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் ராஜா, “நல்ல படங்கள் வெளிவருவதற்கு நிறைய தடைகள் இருக்கின்றன. சோதனை முயற்சியாக எடுக்கப்படும் படங்களின் பட்ஜெட் எப்போதும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகம். நினைத்த படங்களை இயக்க, இங்கு எந்த இயக்குநருக்கும் உரிமையில்லை. ஹீரோ, தயாரிப்பாளரைத் திருப்திப்படுத்தவே படம் இயக்க வேண்டியுள்ளது. அதையெல்லாம் வெற்றிகரமாக முடித்து, தனக்கென்று ஒரு அடித்தளம் போட்ட பிறகுதான் நினைத்த படத்தை இயக்க முடிகிறது. அப்படி ‘தனி ஒருவன்’ படத்தை இயக்க எனக்கு 14 ஆண்டுகள் ஆனது.
முதலாளித்துவம், வேலைக்காரர்கள் பற்றிய குறைகளை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்த சமூகத்தில், உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அதையும் சினிமா மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறேன். கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்துவிட்டது. இது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம். இந்தப் படத்துக்குப் பிறகு அது நடக்கும் என நம்புகிறேன்” என்றார்.