பொதுவாக தென்னிந்திய சினிமாத் துறையில் வாய்ப்புக் கேட்டு வரும் இளம் பெண்களை படுக்க அழைப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட மலையாள திரைத் துறையில், புதிய பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க செக்ஸுக்கு அழைக்கிறார்கள் என அம்மாநில நடிகைகள் சிலரே வெளிப்படையாக கூறியிருந்தனர்.
தெலுங்கு, தமிழ் பட உலகிலும் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இதுவரை தொந்தரவு கொடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், கபாலி படத்தின் நாயகி ராதிகா ஆப்தேவும் தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ராதிகா ஆப்தே தமிழில் டோனி, வெற்றிச்செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹிந்தி பட உலகில் அதிக படங்கள் கைவசம் வைத்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பாலிவுட்டில் அவர் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராதிகா ஆப்தே அளித்த பேட்டி ஒன்றில், "தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமைகள் உள்ளன. நான் ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். படம் சம்பந்தமாக இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென்று அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
நான் அந்த மாதிரி நிலைமைக்கு என்றும் போனதில்லை. அப்படிப்பட்டவர்களை உதாசினம் செய்து விட்டேன். அதனால்தான் தென்னிந்திய மொழி படங்களில் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லை என்று கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.