‘தமிழ்நாட்டில் சினிமாக்காரர்களுக்கு வங்கிக்கடன் கொடுப்பது இல்லை’ என இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார்.
சினிமா இணை தயாரிப்பாளரான அசோக் குமார், கந்துவட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், “தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 40, 50 ஆண்டுகளாக திரைத்துறையைச் சார்ந்தவர்களின் ஆட்சிதான் நடந்து வருகிறது. சினிமா இல்லாமல் இங்கே எதுவுமே இல்லை. கோடிகளில் சம்பளம் வாங்குகிற ஒன்றிரண்டு பேரைத்தான் வெளியில் தெரிகிறது. சினிமாக்காரர்களுக்கு வீடு கிடையாது, வங்கியில் கடனும் கிடையாது. மற்ற மாநிலங்களில் வங்கி கடன் கொடுக்கிறது. மும்பை போன்ற எல்லா இடங்களிலும் வங்கிக்கடன் கொடுக்கிறார்கள். ஆனால், இங்கு மட்டும் தருவது கிடையாது. வங்கிக்கடன் கிடைக்க அரசு வழிவகை செய்தால், ஏன் கந்துவட்டிக்குப் போகிறார்கள்?
பலமுறை இந்த கோரிக்கையை வைத்திருக்கிறேன், மறுபடியும் வைக்கிறேன். கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, தமிழக அரசுக்கு உட்பட்டது என்ன இருக்கோ... அதில் கடன் கொடுக்கும் பட்சத்தில் இந்தக் கந்துவட்டிக் கொடுமை தீர்க்கப்படும்” என்று கூறினார்.