‘அசோக் குமாருடன் எந்த வரவு - செலவும் கிடையாது’ என மதுரை அன்புச் செழியனின் ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோபுரம் ஃபிலிம்ஸ், 25/11, ராகவையா ரோடு, சென்னை - 17 என்ற முகவரியுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘இன்றைய நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகளில் அசோக் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டு, அவர் ஒரு கடிதம் எழுதி வைத்ததாகவும், அதில் சில வார்த்தைகள் எழுதி வைத்துள்ளதாகவும் செய்திகளில் வந்துள்ளது. அசோக் குமார் என்பவர் எழுதி வைத்ததாக சொல்லப்படும் கடிதம், அவர் எழுதி வைத்ததுதானா?
அசோக் குமார் என்பவர் சசிகுமாரின் உதவியாளர். நாங்கள் அசோக் குமார் என்பவருக்கு எந்த பண வரவு - செலவும் செய்யவில்லை. படம் தயாரிப்பதற்கு சசிகுமார்தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்தவித வியாபாரத் தொடர்பும் இல்லாத அசோக் குமார், எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. எங்களிடம் பண உதவிபெற்று படம் தயாரிக்கிறார்கள். அதை, படம் ரிலீஸ் செய்யும்போது செட்டில் செய்வார்கள். இதுதான் சினிமா நடைமுறை.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/IMG-20171122-WA0029-214x300.jpg)
சிலர், எந்த முதலீடும் இல்லாமல் படம் தயாரிப்பதாக வருகிறார்கள். எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் இவர்களை நம்பி பணம் தருகிறோம். இவர்கள், ஒரு படத்திற்கு பலரிடம் பணம் வாங்குகிறார்கள். ஆனால், இவர்கள் படம் தயாரிக்காமல், வீடு, கார் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பண உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள். இப்படி சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அலைவதாகத் தெரிகிறது.
நாங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்த புகாரும் கிடையாது. மேற்படி அசோக் குமார் என்பவர் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், மேலாளர் என்று ஆர்.முரளி கையெழுத்திட்டுள்ளார்.