‘எனக்கும், பா.இரஞ்சித்துக்கும் உறவுச் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம்’ என ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘அறம்’. ‘மீஞ்சூர் கோபி’ என்று அழைக்கப்படும் கோபி நயினார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சமூகக் கருத்துகள் நிறைந்த, அரசை எதிர்த்து கேள்விகள் கேட்கின்ற படமான இதை, எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.
விளிம்பு நிலை மக்களுக்காக சினிமா மட்டுமல்லாது, நிஜத்திலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் இயக்குநர் பா.இரஞ்சித்தும் ‘அறம்’ படத்தைப் பாராட்டியுள்ளார். “ வென்றது பெரும் மகிழ்ச்சி... இயக்குனர் & படக்குழுவினர்க்கும் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.
பா.இரஞ்சித், கோபி நயினார் பெயரைப் பதிவு செய்யாததால், அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்னை என்று தொடங்கி, ஜாதி ரீதியிலான மோதல் வரை கொண்டுவந்து விட்டனர் சிலர். பா.இரஞ்சித் இதுகுறித்து எதுவும் வாய்திறக்காத நிலையில், கோபி நயினார் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
“இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். ஆனால், சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான
சூழலல்ல.
தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன். நானும், இயக்குனர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கிறது. அதில் குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்து செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போதுதான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமையக்கூடும்.
ஆதலால், உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான்
அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தத்தைத் தந்திருந்தால், அவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் கூறப்பட்டுள்ளது.
பா.இரஞ்சித்தின் ட்வீட்டில் கோபி நயினாரின் பெயரைக் குறிப்பிடாமல் இயக்குநர் என்று குறிப்பிட்டது போல், கோபி நயினாரும் பா.இரஞ்சித் என்று குறிப்பிடாமல் யாருக்கேனும் மனவருத்தம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, இப்போதைக்கு இந்தப் பிரச்னை ஓயாது போல...