தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ராணி பத்மினி கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலியே இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வயாகாம்18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
ராணி பத்மினியாக தீபிகா படுகோனே நடிக்க ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டனர். ரிலீஸ் நெருங்கிய இந்த வேளையில், எதிர்ப்புகள் அதிகமாகியுள்ளன. கடந்த 17ஆம் தேதி ரிலீஸாக இருந்த படம், எதிர்ப்புகளால் டிசம்பர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும், எதிர்ப்புகள் அடங்கியபாடில்லை. தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் தலைக்கு ஒரு அமைப்பு 50 லட்ச ரூபாயும், இன்னொரு அமைப்பு 5 கோடி ரூபாயும், மற்றொரு அமைப்பு 10 கோடி ரூபாயும் அறிவித்துள்ளது. தீபிகா படுகோனேவை உயிரோடு கொளுத்துபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்துள்ளது இன்னொரு அமைப்பு. எனவே, இருவருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
‘பத்மாவதி’ ரிலீஸாகும் டிசம்பர் 1ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது ஸ்ரீராஜ்புத் கர்ன சேனா அமைப்பு. இப்படி வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
இன்னொரு பக்கம், சென்சார் போர்டுக்கு அனுப்பிய விண்ணப்பப் படிவத்தில் தகவல்கள் சரியாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறி விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது சென்சார் போர்டு. சரியான தகவல்களுடன் விண்ணப்பித்தபின் படத்தைப் பார்ப்போம் எனவும் சென்சார் போர்டு கூறியுள்ளது. இதனாலும் படத்தின் ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளனர்.