‘பத்மாவதி படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம்’ என குஜராத் முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
ராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை இது. ராணி பத்மினியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. தீபிகா படுகோனே தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே, கடந்த மாதம் ரிலீஸாக வேண்டிய படம், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்தக் கலவரங்கள் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வருகிற 25ஆம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. ஆனால், ‘இந்தப் படத்தை குஜராத்தில் ரிலீஸ் செய்யவிட மாட்டோம்’ என குஜராத் முதல்வர் விஜய் ருபானி சொன்னதாக ஏ.என்.ஐ. நிறுவனம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
Film #Padmavat will not be released in Gujarat: Chief Minister Vijay Rupani (File pic) pic.twitter.com/jkUpQ0inIv
— ANI (@ANI) 12 January 2018