/indian-express-tamil/media/media_files/wkhKFOwV55qzId6ImGy0.jpg)
இயக்குநர் ப. ரஞ்சித் தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்தும், தான் கடந்து வந்த பாதை குறித்தும் சமீபத்தில் ஆவுடையப்பன் டாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். ப.ரஞ்சித் அறிமுக இயக்குநர் சிவா சண்முகத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிறகு, வெங்கட் பிரபுவிடம் சென்னை 600028 (2007), சரோஜா (2008) போன்ற படங்களில் பணியாற்றினார். தயாரிப்பாளர் சி.வி. குமார் மூலம் கிடைத்த வாய்ப்பில், அட்டகத்தி (2012) என்ற இளைஞர்களின் காதலைப் பேசிய இலகுவான திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
வடசென்னையின் அரசியல் வாழ்வியலைப் பேசிய மெட்ராஸ் (2014) திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது அவரது சினிமா பயணத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்துக்காக அவர் சிறந்த இயக்குநர் விருதுகளைப் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி (2016) மற்றும் காலா (2018) ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கினார். இந்தப் படங்கள், நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி, தலித் அரசியல், நில உரிமைப் போராட்டம் போன்ற சமூக அரசியல் கருத்துக்களைப் பரவலாக எடுத்துச் சென்றன.
1980களில் வடசென்னையின் குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட சார்பட்டா பரம்பரை (2021) மற்றும் சாதி, அரசியல், காதல் ஆகியவற்றைப் பேசிய நட்சத்திரம் நகர்கிறது (2022) போன்ற படங்களின் மூலம் தன் சமூகப் பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்தார். இவரது அடுத்த வெளியீடாக தங்கலான் (2024) என்ற படத்தையும் இயக்கினார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் பணம் சம்பாதிக்கதான் சினிமாவுக்கு வந்ததாகவும் 12 ஆம் வகுப்பில் ஃபெயில் ஆனதாகவும் தெரிவித்தார்.
தான் 12ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்ததை ரஞ்சித் ஒப்புக்கொண்டார். தனக்குச் சிறு வயதிலிருந்தே ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், எம்.சி.சி (MCC) கல்லூரியைக் கடந்து செல்லும்போதெல்லாம், "இது நான் படிக்க வேண்டிய கல்லூரி" என்று மனதளவில் ஏங்கியதாகவும் குறிப்பிட்டார். நல்ல மாணவனாக இருந்தும், சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால், 12ஆம் வகுப்பில் படிப்பை விட்டுவிட்டு, வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்தியதால் தான் தோல்வியடைந்ததாகக் கூறினார்.
அவர் 12ஆம் வகுப்புத் தோல்வியடைந்த செய்தி கேட்டபோது, அவரது தந்தை கவலைப்பட்டதை வாழ்நாளில் மறக்க முடியாது என்று ரஞ்சித் குறிப்பிட்டார். "சரி விடுப்பா" என்று அவரது தந்தை உடைந்த குரலில் பேசியது இன்றும் நினைவில் இருப்பதாக உருக்கத்துடன் பகிர்ந்தார். தோல்விக்குப் பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, தனக்கு நன்றாக வருவது ஓவியம் வரைவது (Drawing) என்று உணர்ந்தார்.
அவரது மாமாக்கள் (கௌதம், பூபதி பாண்டியன்) சென்னை ஓவிய நுண்கலைக் கல்லூரியில் (College of Fine Arts) படித்ததால், அங்கே சேர்ந்து அனிமேட்டர் ஆகலாம், நல்ல சம்பளம் கிடைக்கும் என்று நினைத்து அந்தக் கல்லூரிப் பாதையைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார். பின்னர் அப்படியே சினிமா வாய்ப்புகள் கிடைத்து தற்போது இங்கு வந்து இருப்பதாக தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.