இந்திய அழகியான மனுஷி சில்லார் 2017-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.
மனுஷி சில்லார், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி! ஏற்கனவே இந்திய அழகியாக தேர்வு பெற்றவர். சீனாவின் சன்யா நகரில் நேற்று (18-ம் தேதி) நடைபெற்ற உலக அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா’ மனுஷி சில்லார் உள்ளிட்ட 118 அழகிகள் கலந்துகொண்டனர். இதில் 2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக மனுஷி சில்லார் அறிவிக்கப்பட்டார்.
மனுஷி சில்லாருக்கு 2016-ஆம் ஆண்டு உலக அழகியான பியூர்டோரிகோவின் ஸ்டெஃபானி டெல் வாலி உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார். போட்டியின் போது மனுஷி சில்லாரிடம் எந்தப் பணிக்கு மிகப்பெரிய ஊதியம் வழங்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. தாயாக இருக்கும் பணிதான் சிறப்பானது என்றும் அதற்கு பணமாக இல்லாவிட்டாலும், அன்பு மற்றும் மரியாதை என்ற மிகப்பெரிய ஊதியம் வழங்கப்படுவதாகவும் பதிலளித்தார்.
மனுஷி சில்லார் உலக அழகிப் பட்டம் வென்றதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்த்துக்கள் மனுஷி சில்லார். உங்கள் சாதனையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது’ என பதிவிட்டுள்ளார். இதேபோல அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் முக்கிய பிரபலங்கள் உலக அழகி மனுஷி சில்லாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பிரபலங்கள் பலரது வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் மனுஷி சில்லார்.