ரஜினியைச் சந்திக்கும் ரசிகர்கள், அவர் காலில் விழக்கூடாது என கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூர், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, வேலூர் உள்பட விடுபட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை இந்த மாதம் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சந்திக்க இருக்கிறார் ரஜினி.
இந்தச் சந்திப்பில், சுமார் 6000 ரசிகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மன்றப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் 400 அல்லது 500 ரசிகர்களைத் தேர்வுசெய்து, புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய விவரங்களை ரசிகர் மன்றத் தலைமைக்கு மாவட்டத் தலைவர்கள் அனுப்பி உள்ளனர். அந்தப் பட்டியலைப் பரிசீலித்து, ரஜினியைச் சந்திக்கும் ரசிகர்களின் இறுதிப் பட்டியல் தயாராகியுள்ளது.
ரஜினியைச் சந்திக்க இருக்கும் ரசிகர்களுக்கு, போட்டோ ஒட்டிய சிறப்பு அடையாள அட்டை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டையில், பார் கோடும் அச்சிடப்பட்டுள்ளது. அடையாள அட்டையுடன் வரும் ரசிகர்கள் மட்டுமே ரஜியைச் சந்திக்க முடியும். அதுவும் அந்த பார் கோடு ஸ்கேனிங் மெஷினில் பரிசோதிக்கப்பட்டு, உண்மையான அடையாள அட்டையாக இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்.
தினமும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 1000 ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் ரஜினி. அந்த புகைப்படம் உடனுக்குடன் பிரிண்ட் போட்டு ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது. காலை 7 மணியில் இருந்து மாலை 3 மணி வரை இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. ராகவேந்திரா திருமண மண்டபத்திலேயே ரசிகர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு மறுநாள் இந்தச் சந்திப்பு தொடங்குவதால், சென்னக்கு அருகிலுள்ள ரசிகர்கள் முதலில் அழைக்கப்பட இருக்கின்றனர். ரசிகர்கள், தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்து வரக்கூடாது என்றும், ரஜினியின் காலில் விழக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.