நடிகர் ரன்வீர் சிங் - நடிகை தீபிகா படுகோனே இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது.
‘ஐஸ்வர்யா’ என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. பரா ஹான் இயக்கிய ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இன்றைக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கக் கூடியா தீபிகா படுகோனே, ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கூட ‘கோச்சடையான்’ படத்தில் நடித்துள்ளார். ஒரு படத்துக்கு 9 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
இவருக்கும், நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் ஜோடியாக நடித்துள்ள ‘பத்மாவதி’ படம் பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. ‘பத்மாவதி’ படத்தில் சித்தூர் ராணி பத்மினியாக தீபிகா படுகோனேவும், அவர்மீது காதல் கொண்டு படையெடுத்து வரும் மன்னன் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் ரிலீஸாக வேண்டிய படம், சர்ச்சைகளால் இந்த மாதம் 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனாலும், இன்னும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், ரன்வீர் சிங் - தீபிகா படுகோனேவுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகத் தகவல் பரவியுள்ளது. தீபிகா படுகோனே, தனது 32வது பிறந்த நாளை சமீபத்தில் மாலத்தீவில் கொண்டாடினார். இதில், ரன்வீர் சிங் மற்றும் அவருடைய பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தீபிகா படுகோனேவுக்கு விலை உயர்ந்த மோதிரத்தை ரன்வீர் சிங் அளித்ததாகவும் சொல்கிறார்கள்.
ரன்வீர் - தீபிகா இருவரும் இணைந்து கோவாவில் புதிய பங்களா வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளனர். அத்துடன், லண்டனிலும் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.