கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா கனிகா, நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்துள்ளார். மேலும் ‘புஷ்பா’ நட்சத்திரம் கர்நாடகாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், கன்னடர்களை புறக்கணித்ததாக அவர் குற்றம்சாட்டுகிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Shouldn’t we teach them a lesson?’: Congress MLA claims actor Rashmika Mandanna ‘disregarded’ Kannada, sparks row
கர்நாடகாவின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ராஷ்மிகா மந்தனா நிராகரித்ததாகவும், மாநிலத்துடனான தனது உறவை அவர் நிராகரித்ததாகவும் கவுடா முன்பு குற்றம் சாட்டினார். "நாங்கள் ராஷ்மிகாவை அழைத்தோம். ஆனால் அவர், ' ஹைதராபாத்தில் என் வீடு உள்ளது. கர்நாடகா எங்கே என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு நேரமில்லை' என்று கூறினார். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர், ராஷ்மிகாவை அழைக்க 10-12 முறை அவரது வீட்டிற்குச் சென்றார். ஆனால் அவர் கன்னட திரையுலகம் மூலம் வளர்ந்த போதிலும் கன்னடத்தை மறுத்து புறக்கணித்தார். அவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?" என கவுடா கூறினார்.
"ரவுடித்தனத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை"
பா.ஜ.க தலைவர்கள் உட்பட பலர் முன்வைத்த விமர்சனங்களைத் தொடர்ந்து, கவுடா தனது அறிக்கை "ரவுடியிசத்திற்கான" அழைப்பு அல்ல என்று தெளிவுபடுத்தினார். ANI இடம் பேசிய அவர், "நான் ஒரு கன்னடனாக இருப்பதால், எனது கூற்றில் நான் உறுதியாக நிற்கிறேன். என் தாய்நாடு மற்றும் மொழி குறித்து பெருமை கொள்கிறேன். ராஷ்மிகா மந்தனாவை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் அவர் தனது வேர்களை மறந்துவிடக் கூடாது. நான் ரவுடித்தனத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கவுடா மீது பா.ஜ.க குற்றச்சாட்டு
கவுடாவின் கருத்துக்கு பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ராகுலின் காங்கிரஸ்காரர்களிடமிருந்து ரவுடித்தனத்தை பிரிக்க முடியாது. நடிகைக்கு பாடம் புகட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ கூறுகிறார். அரசியல் சாசனத்தின் படி நடிகை உள்ளிட்ட அனைவருக்கும் தங்கள் தனிப்பட்ட உரிமை இருக்கிறது என்பதை உணர வேண்டும் என ஷிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோருக்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன். இந்த அரசியல் சாசனத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும் என உங்கள் எம்.எல்.ஏ விரும்பினால், அவருக்கு அதனை இலவசமாக கற்றுத் தர நான் தயாராக இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.