ஆஸ்கார் : 2019 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதில் போட்டிப்போட, இந்தியா சார்பில் அசாம் மொழி திரைப்படமான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.படத்தின் இயக்குனர் ரீமா தாஸ் இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.
ஆஸ்கார் விருது :
ஆஸ்கர் விருது உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள 91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் போட்டிப்போட இந்திய படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்பட கூட்டமைப்பு சார்பில் அசாம் மொழியில் வெளியான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற திரைப்படம், சிறந்த வெளிநாட்டு மொழி பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ரிமா தாஸ் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம், தேசிய விருதையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஏழ்மையில் வாடும் சிறுமி, பின்னாளில் வளர்ந்து தன் கடின உழைப்பால் ராக் இசைக்குழு ஒன்றை ஏற்படுத்தி தன் சிறுவயது கனவை நனவாக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களான ஆலியா பட் நடித்த ரசி , தீபிகா படுகோன் நடிப்பில் சக்கைப்போடு போட்ட பத்மாவதி , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மகாநதி போன்ற படங்கள் இந்த ஒரு இடத்திற்காக போட்டி போட்டன. இந்நிலையில் இன்று காலை பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் இயக்குனர் ரிமா தாஸ் கண்ணீருடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, ” வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானது என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது, அளவுகடந்த ஆனந்தத்தோடும் . பெருமையோடும் இந்த செய்தியை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
With tears of joy and a feeling of pride, I humbly accept this news. #VillageRockstars is India's official entry for the #Oscars ! Let that sink in ???? https://t.co/CoprRkBT50
— rima das (@rimadasFilm) 22 September 2018
வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானதை தொடர்ந்து திரைப்பட பிரபலங்களும் , இந்திய சினிமா ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இது ஆஸ்கார் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் அசாம் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் நிச்சயம் ஆஸ்காரில் விருதை கைப்பற்றும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.