தெலுங்கு திரையுலகமே ஒரு நிகழ்விற்காகத்தான் இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்வு, நடிகர் சமந்தா மற்றும் அக்கினேனி நாக சைத்தன்யாவின் திருமணத்திற்காகத்தான்.
நடிகர் நாக சைத்தன்யா, தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரானா நாகார்ஜூனாவின் மகன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நடிகை சமந்தாவும், நாக சைத்தன்யாவும் காதலித்து வருகின்றனர். அவர்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6 மற்றும் 7-ஆம் தேதிகள் திருமண வைபோகம் நடைபெற உள்ளது. கோவாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது. அதற்காகத்தான தெலுங்கு திரைப்பட உலகினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா தெலங்கானா மாநிலத்தில் நெசவாளர்களை கௌரவிக்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டார். இதன்பின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் சமந்தாவுக்கும், நாக சைத்தன்யாவுக்கும் எப்போது, எங்கு காதல் மலர்ந்தது என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.
”மனதளவில் எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. எனக்கென நான் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் எண்ணங்களை நான் பின்பற்றுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என மற்றவர்கள் கூறுவதை நான் விரும்பவில்லை. பல சமயங்கலில் நான் என் 30-வது வயதில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறேன். அதுதான் இப்போது நடக்கிறது. என் வாழ்க்கை எங்கு, எப்படி செல்ல வேண்டும் என நான் தீர்மானிப்பதில் இது ஒரு உதாரணம் தான்”, என சமந்தா கூறினார்.
தனக்கு பக்கபலமான குடும்பத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்துகொள்வது குறித்தும் சமந்தா பேசினார். “எல்லாமே சிறப்பாக உள்ளது. எதுவுமே மாறப்போவதில்லை. என்னுடைய வேலை மாறாது. என்னுடைய அணுகுமுறை மாறப்போவதில்லை. நான் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபரும், அவருடைய குடும்பமும் என்னிடமிருந்து எந்த மாற்றத்தையும் கேட்கவில்லை. அதற்காக நன்றி. நான் என் விருப்பம்போலவே வாழ வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அது அழகாக உள்ளது.”, என மகிழ்வுடன் கூறினார் சமந்தா.
“‘யே மாயா சேசவே’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதே நாக சைத்தன்யா மீது நான் காதலில் விழுந்துவிட்டேன். அப்போதிருந்தே நாங்கள் ‘மேட் ஃபார் ஈச் அதர்’ தான். நாக சைத்தன்யாவை விட எனக்கு எதுவும் உண்மையானவை அல்ல”, என தான் காதலில் விழுந்தது குறித்து சமந்தா கூறினார்.