2.0 படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளது நமக்கு தெரிந்ததே. தனுஷ் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹியூமா குரேஷி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
விரைவில் முதற்கட்ட படப்பிடிப்பை மும்பையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்வார் என தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சமீபத்தில் நடந்த ரசிகர்களுடனான சந்திப்பின் போது, அரசியலுக்கு வருவது குறித்து சூசமாக பேசினார். இதையடுத்து, சீமான் உள்ளிட்ட சில தமிழ் ஆர்வலர்கள் ரஜினிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, 'தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும்' என சீமான் பேசினார்.
இந்நிலையில், சினிமா பிரபலமாக இருந்தாலும் மிகுந்த தமிழ் ஆர்வமுடைய, தமிழ் பற்றுக் கொண்ட சமுத்திரக்கனி, ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.