sexually harassing actress : பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக வெப் சீரிஸ் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது விருகம்பாக்கத்தில் வசிக்கும் நடிகை சுவேதா என்பவர் கன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். பின்னர் இதுகுறித்து அடையார் டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ் விக்ரமிடம் நடிகை புகார் அளித்தார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசிப்பவர் ரஞ்சித். அக்கரை பகுதியில், இயக்குநர் ரஞ்சித் வெப் சீரியல் ஷூட்டிங் நடத்தி வந்தார். இதில், சுவேதா (25) என்ற இளம்பெண் நடித்து வந்தார். இந்நிலையில், ரஞ்சித், சுவேதாவிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தியதோடு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை சுவேதா பலமுறை கண்டித்து வந்தார். அதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்து சுவேதாவுக்கு ரஞ்சித் தொல்லை கொடுத்து வந்தார்.
இதனால், மனமுடைந்த சுவேதா நேற்று முன்தினம் மாலை கானத்தூர் காவல் நிலையில் புகார் அளித்தார்.இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கானத்தூர் போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் வேலு, ரஞ்சித் மற்றும் அவரது உதவியாளர்கள் கார்த்திக் (26), ரியாஸ் (23) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
அதில், ரஞ்சித், சுவேதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நடிகையை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்த அவரது உதவியாளர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.