காணாமல் போன குழந்தையைக் கண்டிபிடிக்கும் ஒன்லைன் தான் ‘சத்யா’.
ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் சிபிராஜும், ரம்யா நம்பீசனும் காதலிக்கின்றனர். ஆனால், இவர்கள் காதலை ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவருக்குத் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொள்ள கோயிலுக்குச் செல்லும்போது, நிழல்கள் ரவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. அதைக் காரணம் காட்டி, ரம்யா நம்பீசனை வேறொருவருக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார் நிழல்கள் ரவி.
ஆன்சைட் ஒர்க்கிற்காக சிபிராஜும், அவருடைய நண்பர் யோகி பாபுவும் ஆஸ்திரேலியா செல்கின்றனர். 4 வருடங்களுக்குப் பிறகு ரம்யா நம்பீசனிடம் இருந்து சிபிராஜுக்கு போன். சிபிராஜை சந்திக்க விரும்புவதாக ரம்யா நம்பீசன் சொன்னதால், இந்தியா புறப்பட்டு வருகிறார் சிபி. அவரிடம் தன் குழந்தை காணவில்லை என்றும், அதை கண்டுபிடித்துத் தருமாறும் சொல்கிறார் ரம்யா நம்பீசன்.
சிபிராஜ் விசாரணையில் இறங்க, அப்படி ஒரு குழந்தையே இல்லை என்கிறார்கள் அனைவரும். ரம்யாவுக்கு மூளை குழம்பிவிட்டது என்கிறார் அவருடைய கணவர். இதனால், சிபிராஜ் ரம்யா நம்பீசன் மீதே சந்தேகப்பட, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார் ரம்யா. உண்மையிலேயே குழந்தை காணாமல் போனதா? சிபிராஜை ரம்யா நம்பீசன் இந்தியாவுக்கு வரவழைத்தது ஏன்? என்பது விறுவிறுப்பான திரைக்கதை.
ஏற்கெனவே தெலுங்கில் வெளியான படத்தை, தமிழில் ரீமேக் செய்திருக்கின்றனர். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து, சுவாரசியம் குறையாமல் இயக்கியிருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. மிக ஸ்டைலிஷ்ஷாக இருக்கிறார் சிபிராஜ். ரொம்பவே அழகாக ரம்யா நம்பீசன். சதீஷுக்கு கேரக்டர் வேடம். காமெடிங்கிற பேர்ல கழுத்தறுக்காம, இப்படி ஏதாவது நல்ல ரோல்ல நடிக்க ப்ரோ.
சைமன் கே கிங் இசையில், ‘யவ்வனா’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு ஈர்க்கிறது. வரலட்சுமியைக் கூட அழகாக காட்டியிருக்கிறார். விறுவிறுப்பு குறையாமல் க்ளைமாக்ஸில் வைக்கும் ட்விஸ்ட், படத்தை வலுவாக்குகிறது.