தமிழ் சினிமாவில் வெகு சில ஹீரோக்களுக்கு மட்டும், எத்தனை தடவை படம் தோற்றாலும், அவர்களது அடுத்தப் படம் அதைவிட அதிக எதிர்பார்ப்போடு வெளிவரும்.
அந்த சில ஹீரோக்களில் சிம்புவும் ஒருவர். சிம்புவின் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வியைப் பெற்றுத் தந்தது. அவரது பெரும்பாலான ரசிகர்களே விரும்பாத படமாக அது அமைந்தது. இதனால், அவரது அடுத்தப் படம் குறித்த வதந்திகள் சமூக தளங்களில் கடந்த சில நாட்களாக பரவத் தொடங்கியது.
குறிப்பாக, பில்லா- 3 என்ற பெயரில் சிம்பு ஒரு படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதில் சிம்பு மிகவும் கொடூரமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளது, அதில் ஒன்று சிம்பு நடிக்கிறார். மற்றொன்று, முன்னணி பெண் கதாபாத்திரம் ஆகும். இந்த கேரக்டருக்கு ஸ்டைலான நடிகையை சிம்பு தேடி வருகிறார். 'ஆரம்பம்' படத்தில் நடித்த அக்ஷரா கவுடாவை நடிக்க வைக்க சிம்பு எண்ணியுள்ளார். இந்த படத்தின் சில ரிகர்சல் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் ஷூட் செய்யப்பட்டது. விரைவில் இதற்கான டீசர் வாய்ப்பு உள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் முழுவதையும் அமெரிக்காவில் நடத்த சிம்பு திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் படத்திற்கான லொக்கேஷனை தேர்வு செய்வதற்காக சிம்பு அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியது.
இதனை முற்றிலுமாக மறுத்த சிம்பு, "எனது அடுத்த படம் குறித்து செய்திகள் வெளியிடுவதை நிறுத்துங்கள். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரையில் தயவு செய்து பொறுமை கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சிம்பு தனது ட்விட்டரில், தனது அடுத்த படம் குறித்த சில தகவல்களை இன்று பதிவிட்டுள்ளார்.
முதல் ட்விட்டர் பதிவில், "கேட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்றும், "ஏழு தடவை வீழ்ந்து, எட்டாவது தடவை எழுந்திடு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எனது புதிய படத்தின் டைட்டில் மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது ட்வீட்டில், "பாடல்கள் இல்லை, பாத்ரூம் செல்ல இண்டர்வல் கிடையாது. படம் ஆரம்பிக்கும் முன்னரே, குளிர்பானங்களையும், பாப்கார்னையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செப்டமர் 2017-ல் படம் ரிலீசாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்க உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.