சிம்புவுக்கு எதிராக அதிகரிக்கும் நெருக்கடிகளால், மணிரத்னம் படத்தில் சிம்பு தொடர்வாரா இல்லை நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிம்புவை வைத்துப் படமெடுத்தால் சிக்கலுக்கு ஆளாவோம் என்பது தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனாலும், விதி யாரை விட்டது? முயற்சி செய்துதான் பார்ப்போம் என்று களத்தில் இறங்கி சிம்புவால் மூக்குடைபட்டவர்கள் ஏராளம். அவர்களில் லேட்டஸ்ட்டாக அடிபட்டவர்தான் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன்.
குளோபல் இன்போடெயின்மெண்ட் மூலம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தைத் தயாரித்த வகையில், மைக்கேல் ராயப்பனுக்கு ஏகப்பட்ட கோடிகள் நஷ்டம். அவர் கையில் இருந்த மொத்தப் பணமும் காலி. தெளிவாகச் சொல்வதென்றால், நடுத்தெருவில் நிற்காத குறைதான். ஜீவா, நிக்கி கல்ரானி, அனைக்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘கீ’ படத்தை வெளியிட, ஒத்தப் பைசா கூட அவரிடம் இல்லை.
எனவே, நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கதவைத் தட்டியிருக்கிறார் மைக்கேல் ராயப்பன். தயாரிப்பாளர்கள் சங்கமும் இதுகுறித்து விளக்கம் கேட்டு சிம்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்
இந்நிலையில், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நட்சத்திரங்களை வைத்து தான் இயக்கும் படத்தில், சிம்புவையும் சேர்த்துள்ளார் மணிரத்னம். இந்தப் படத்துக்காக, சிம்புவிடம் அட்வான்ஸும் கொடுத்திருக்கிறது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்.
இந்த விஷயம் கேள்விப்பட்டதும் அவசரம் அவசரமாக மணிரத்னத்தைச் சென்று சந்தித்திருக்கிறார் விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம். காரணம், ‘வாலு’ படத்திற்காக சிம்புவின் தந்தையான டி.ஆர்., அவருக்கு இரண்டு கோடி ரூபாய் தரவேண்டுமாம். அதில் ஐம்பது லட்சத்தைக் கொடுத்துவிட்ட டி.ஆர்., மீதி ஒன்றரை கோடியைத் தராமல் இழுத்தடிக்கிறாராம். இதனால், ஒன்றரை கோடி திரும்பக் கிடைக்கும்வரை சிம்பு நடித்த எந்தப் படத்தையும் கோவை ஏரியாக்களில் ரிலீஸ் பண்ண மாட்டேன் என்று மணிரத்னத்திடம் சொல்லியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
ஏற்கெனவே மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரில் தயாரிப்பாளர் சங்கம் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கத் தீவிரமாக இருக்கு இந்த நேரத்தில், திருப்பூர் சுப்பிரமணியனும் சிம்புவுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால், அவரை வைத்துப் படம் இயக்கலாமா அல்லது கழட்டி விடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் மணிரத்னம்.