ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. கிராபிக்ஸ் டிசைனரான சவுந்தர்யா 'படையப்பா' முதல் தன் கிராபிக்ஸ் தொழில் சார்ந்த பணியில் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றி வந்தவர். ரஜினிக்கு மட்டுமல்ல, விஜய்யின் 'சிவகாசி' படத்தின் டைட்டில் கிராபிக்ஸும், 'கத்தி' படத்தின் கிராபிக்ஸ் பணியும் சவுந்தர்யாவின் கைவண்ணமே. மேலும் பல படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். அதன்பின் தயாரிப்பாளர், இயக்குனர் என அவதாரம் எடுத்தார்.
விரைவில், பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸாகவும் தயாரிக்க உள்ளார். இது இவரது கிராபிக்ஸ் பணியின் மயில்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அப்பா ரஜினிக்கு மகள்கள் இருவருமே செல்லம் என்றாலும், 'கடைக்குட்டி' சவுந்தர்யா மீது சற்று பாசம் தூக்கலாகவே இருக்குமாம்.
கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வின் என்பவருக்கு, சவுந்தர்யாவை கட்டிக் கொடுத்தார் ரஜினி. இது முழுக்க முழுக்க பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இது ரஜினிக்கு தனிப்பட்ட விதத்தில் பெரிய காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், எதையும் வெளிக்காட்டாமல் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக சினிமாவில் பிஸியாக நடித்து வந்தார். அதாவது, உள்ளே வேதனையையும், வெளியே சிரிப்பையும் காட்டி வந்தார் ரஜினி.
இந்த நிலையில், விசாகன் என்பவரின் நட்பு சவுந்தர்யாவுக்கு ஏற்பட, நாளடைவில் அது காதல் என்பதைத் தாண்டி நல்ல புரிதலில் வந்து நின்றது. இப்போது அந்த புரிதல் திருமணத்தில் முடிந்துள்ளது. விசாகனும், கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்துப் பெற்றவர்.
மகளின் இந்த புரிதலை மதித்த ரஜினி, விசாகன் பெற்றோரிடம் பேசிய போது, இரு குடும்பத்திற்கு இடையேயும் நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அப்புறம் என்ன கல்யாணம் தான்!.
ஆனால், கடந்த முறை போல் அல்லாமல், இந்தத் திருமணம் மகளின் வாழ்க்கையில் இனிக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவே பிரயாசப்பட்டிருக்கிறார் ரஜினி. இரண்டாவது திருமணம் என்றாலும், தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகள், பிரபலங்கள் என அனைவருக்கும் நேரில் சென்று தானே பத்திரிகை வைத்தார். பத்திரிகை வைத்ததோடு மட்டுமில்லாமல், 'நிச்சயம் கல்யாணத்திற்கு வந்து குழந்தைகளை ஆசிர்வதிக்க வேண்டும்' என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
ரஜினியின் அழைத்த விதத்திலேயே, மற்ற வேலைகள் இருந்தாலும், கண்டிப்பாக இந்த திருமணத்திற்கு சென்று வாழ்த்த வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது ரஜினியின் உடல் மொழி. நினைத்ததோடு மட்டுமில்லாமல், நேரில் வந்து அனைவரும் வாழ்த்திச் சென்றிருக்கின்றனர்.
சினிமாவிலும், ரசிகர்கள் மனதிலும் அவர் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்தாலும், சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணத்தைப் பொறுத்தவரை சவுந்தர்யா ரஜினிகாந்தை சவுந்தர்யா விசாகனாக மாற்றி, தனது கடமையை நிறைவேற்றி இருக்கிறார் ரஜினி எனும் பொறுப்புள்ள அப்பா!.
மேலும் படிக்க - மாப்பிள்ளையைவிட டிரஸ்ஸில் கலக்கியது சூப்பர் ஸ்டார்தான்: கலகல கல்யாணக் காட்சிகள்