‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸின் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
விஜய் மூன்று வேடங்களில் நடித்து கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. அவர்களின் 100வது படமான இதை, 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து தயாரித்தனர்.
‘மெர்சல்’ பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து, ரிலீஸாகுமா என கடைசிவரை கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், சிக்கல்கள் எல்லாமே படத்துக்கு இலவச விளம்பரமாக அமைய, இதுவரை 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாகச் சொல்கிறார்கள். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ், அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
தேனாண்டாள் ஃபிலிம் நிறுவனத்தின் சிஇஓவான ஹேமா ருக்மணி, ட்விட்டரில் நேற்று இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், கடந்த வருடம் நவம்பர் 17ஆம் தேதி தான் விஜய்யை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தார் ஹேமா ருக்மணி. அதுதான் ‘மெர்சல்’ படமாகி வெற்றிகரமாக ஓடியது. சரியாக ஒரு வருடம் கழித்து தனுஷ் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த ‘சங்கமித்ரா’ எப்போது தொடங்கப் போகிறது எனத் தெரியவில்லை. ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். தற்போது ‘கலகலப்பு 2’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சுந்தர்.சி, அந்தப் படம் ரிலீஸான பிறகே ‘சங்கமித்ரா’ படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்குவார்.