ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு, ராம் - லட்சுமணன் என்ற இரட்டையர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக கமிட்டாகியுள்ளனர்.
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கெனவே ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
‘விஜய் 62’ படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாள ஒளிப்பதிவாளர் க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத், எடிட் செய்கிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.
‘விஜய் 62’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொல்கத்தாவில் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை அங்கு படமாக்க இருக்கிறார்கள்.
இந்த ஆக்ஷன் காட்சிகளை ராம் - லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வடிவமைத்துப் படமாக்க இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தெலுங்கில் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாகப் பணியாற்றியுள்ளனர். ‘சரய்னோடு’, ‘ஜெய் லவகுசா’, ‘ஜெய் சிம்ஹா’ என பல படங்களில் இவர்கள் பணியாற்றியுள்ளனர். விஜய் நடிக்கும் படத்திற்கு முதன்முதலாக சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களின் படப்பிடிப்பும் கல்கத்தாவில் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களின் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகிவரும் ‘விஜய் 62’ படமும் கல்கத்தாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.