‘விஜய் 62’ படத்தைத் தயாரிப்பது தாங்கள்தான் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொதுவாக விஜய் போன்ற பெரிய நடிகர்கள் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அவர்களின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகளும், பேச்சுக்களும் தொடங்கிவிடும். அப்படித்தான் அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அவருடைய அடுத்த படம் என்ன என்பதைப் பற்றி ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
‘மெர்சல்’, விஜய்க்கு 61வது படம். எனவே, 62வது படத்தை யார் இயக்கப் போகிறார், யார் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என தங்களுக்காகவே சமூக வலைதளங்களில் விவாதித்து வந்தனர் விஜய் ரசிகர்கள். ஒருவழியாக, ஏ.ஆர்.முருகதாஸ் தான் ‘விஜய் 62’ படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்தது. ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணையும் படம் இது. கடந்த இரண்டு படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் என்பதால், விஜய் ரசிகர்கள் குஷியானார்கள்.
‘விஜய் 62’ படத்தை, ‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அதன்பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகத் தகவல் கிடைத்தது. மேலும், ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கி, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்கள் என்றும் கூறப்பட்டது.
‘விஜய் 62’ படத்தில் நயன்தாரா அல்லது ரகுல் ப்ரீத்சிங் இருவரில் ஒருவர்தான் ஹீரோயினாக நடிப்பார் என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொல்கின்றனர் சிலர். அதேபோல், ‘அங்கமாலி டயரீஸ்’, ‘சோலோ’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார் என்றும், தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார் என்றும், தமிழக அரசு விருதுபெற்ற சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், மேற்கண்டவற்றில் எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எல்லாமே படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்தும், ஊகத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டவைதான். அதில் பெரும்பான்மை உண்மையாகத்தான் இருக்கக் கூடும். இந்நிலையில், ‘விஜய் 62’ படத்தை தாங்கள் தயாரிக்க இருப்பதாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
,