விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்காக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்புக முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சூர்யாவின் அடுத்த படம் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.
ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி, அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. தற்போது சந்தானம், அதிதி போகன்கர் நடிப்பில் ‘மன்னவன் வந்தானடி’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் செல்வராகவன், அதை முடித்துவிட்டு சூர்யா படத்தைத் தொடங்குகிறார். செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் பல மாதங்களாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
சூர்யா - செல்வராகவன் இணையும் படத்தை, ‘ஜோக்கர்’ படத்தைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள். தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ படங்களில் நடித்த ரகுல் ப்ரீத்சிங், தமிழ் ரசிகர்கள் தன்னை ரசிக்காததால் தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். அங்கு இப்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.
தமிழ் ரசிகர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்று எண்ணி மகேஷ் பாபு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படமும் ஊத்திக் கொண்டது. தற்போது கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படமாவது அவரைக் காப்பாற்றுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சூர்யா ஜோடியாகவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.