தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான கஞ்சா கருப்பு தான் சொந்தமாக கட்டிய பாலா அமீர் வீட்டை விற்றுவிட்டு தற்போது வாடகை வீட்டில் வசிப்பதாக மனக்குமுறலுடன் கூறியுள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. தொடர்ந்து அமீரின் ராம், பருத்தி வீரன், சிவகாசி, சண்டக்கோழி, உனக்கும் எனக்கும், சுப்பரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.
இதில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரணியபுரம் படத்தில் காமெடி கேரக்டரில் வந்து கடைசியில் வில்லனாக நடித்த இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த கஞ்சா கருப்பு, வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்தார்.
இந்த படத்திற்காக சொந்தமாக போர்வெல்ஸ் வாங்கிய கஞ்சா கருப்பு தான் சினிமாவில் சம்பாதித்த அனைத்து பணத்தையும் இந்த ஒரு படத்திற்காக செலவு செய்தார். ஆனால் இடையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய வேல்முருகன் போர்வெல்ஸ் படத்திற்காக தான் கட்டிய பாலா – அமீர் இல்லத்தை விற்று படத்தை முடித்துள்ளார்.
ஆனால் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில், கஞ்சா கருப்புவின் வீடடையும் காலி செய்தது. இதனால் தற்போது தான் வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறியுள்ளார். சமீபத்தில் சினிமா இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய கஞ்சா கருப்பு கூறுகையில்,
சொந்தமா படம் பண்ணி மாட்டிக்காதேனு ஆரம்பத்திலே பலர் சொன்னாங்க. பாதி வெள்ளத்துக்குள்ள போனதுக்கு அப்புறம்தான் நம்ம மாட்டிக்கிட்டோனு தெரிஞ்சுது. மலேசியாவில் இருந்து மேனேஜர் ஒருவர் இந்த படத்திற்கு அதிக பட்ஜெட் ஆகும் என்று இயக்குனரிடம் சொன்னாராம். அதற்கு இயக்குனர் எதையும் தாங்கும் இதயம் கஞ்சா கருப்பு இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.
கடையில் போர்வெல் போர்வெல்னு போட்டு நான் உழைச்சி சம்பாதிச்ச காசுல பாலா அமீர் இல்லம்னு வச்சிருந்த என் வீட்டையே வித்துட்டு இப்போ வாடகை வீட்டில் இருக்கிறேன். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நான் தொலைத்தது சினிமாவில். சினிமாவில் தான் தேடுவேன். இன்னும் 100 படங்கள் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“