தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவதற்காக ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நாளை அவர் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சந்தித்து பரிசு வழங்கிய விஜய் முதல் முறையில் அரசியல் தொடர்பாக பேசினார். அவரின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் 2026- சட்டபை தேர்தலுக்கு முன் விஜய் கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே நடிகர் விஜய் தமிழகத்தில் தொகுதி வாரியாக தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பன்னையூரில் உள்ள விஜயின் இல்லத்தில் நடைபெறும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் போட்டோஷூட் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியது வைரலாக பரவிய நிலையில், தற்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“