/indian-express-tamil/media/media_files/2025/09/29/sangeetha-acd-2025-09-29-13-50-01.jpg)
21 வயதில் தனக்கு திருமணம் நடந்ததாகவும், முதல் குழந்தைக்கு கொடுத்த அன்பை போலவே 2-வது குழந்தைக்கும் கொடுக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. அதனால் நான் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொண்டேன் என்று நடிகை சங்கீதா கூறியுள்ளார்.
1978-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சினேக்கான் ஒரு பொண்ணு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அவர், தமிழில் என் ரத்தத்தின் ரத்தமே, இதய வாசல், சரத்குமாருடன் சாமுண்டி, ரஜினியுடன் நாட்டுக்கு ஒரு நல்லவன், சிவாஜி பிரபு இணைந்து நடித்த நாங்கள், கமல்ஹாசனின் மகாநதி உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
1995-ம் ஆண்டு ராஜ்கிரண் இயக்கி தயாரித்து நடித்த எல்லாமே என் ராசாதான் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சங்கீதா, அதன்பிறகு, பார்த்திபனுடன் புள்ளக்குட்டிக்காரன், பிரபுவுடன் சீதனம், ராமராஜனுடன் அம்மன் கோயில் வாசலிலே ஆகிய படங்களில் நடித்திருந்த சங்கீதா, 1996-ம் ஆண்டு, விஜயுடன் பூவே உனக்காக என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு காலம் மாறிப்போச்சு, கேப்டனுடன் அலெக்சாண்டர், பொங்கலோ பொங்கல், ரத்னா என பல வெற்றிப்படங்களில் நடித்தார்,
கடைசியாக, கடைசியாக 2000-ம் ஆண்டு கண்திறந்து பாரம்மா என்ற தமிழ் படத்தில் நடித்திருந்த சங்கீதா, அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகினார். 2014-ம் ஆண்டு மீண்டும் மலையாள படத்தில் களமிறங்கிய சங்கீதா, காளிதாஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சமீபத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். இதனிடையே அவள் விகடன் யூடியூப் சேனலில், தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய நடிகை சங்கீதா, 21 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. அதன்பிறகு நான் நடிப்பில் இருந்து விலகிவிட்டேன்.
முதல் கர்ப்பம் எனக்கு மிஸ்ஃபுல்லாக இருந்தது. ஆனால் 2-வது அதே மாதிரி இருக்குமா என்று தெரியவில்லை. என் முதல் குழந்தை மீது எனது முழு அன்பும் பாசமும் இருக்கிறது. 2-வது கர்ப்பம் ஆனால் முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் ஆகிவிடுமா? 2-வது குழந்தைக்கும் முழுவதுமாக கவனித்துக்கொள்ள முடியாத நிலை வரும். இதுபோன்று பொதுவாக எல்லா பெண்களுக்கும் வரும் யோசனை தான் எனக்கும் வந்தது. அதனால் என்னை 2-வது குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று யாரும் வற்புறுத்தவில்லை.
எனது வீட்டிலும், கணவர் வீட்டிலும், நான் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படடார்கள். ஆனால், எனக்கு என்னமோ ஒருவருக்கு சின்சியராக இருந்தால், அப்படியே இருந்துவிட வேண்டும் என்று நினைத்து 2-வது குழந்தை பற்றி நான் யோசிக்கவில்லை என்று சங்கீதா கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக பல வெற்றிப்படங்களை கொடுத்த சங்கீதாவின் கணவர் எஸ்.சரவணன், பூவே உனக்காக படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். சிம்பு நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற சிலம்பாட்டம் படத்தின் இயக்குனரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.