சினிமாவை பொருத்தவரை எவ்வளவு தான் கமர்ஷியல் படம் எடுத்தாலும், விருது பெற வேண்டும் என்பதற்காகவே சில நடிகர்கள, தயாரிபபாளர்கள், இயக்குனர்கள் என பலரும் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான ஒரு படம் அவருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளது. ஆனால் இன்றைக்கு அந்த படத்தை காண்பதே அரிதான ஒரு விஷயம்.
அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விருப்பம். சிலர் இயற்கையாக அழகாக இருப்பார்கள். சிலர் மேக்கப் போட்டு தங்கை அழகாக மாற்றிக்கொள்வார்கள். அதேபோல் அழகாக இருந்தால் தான் நம்மிடம் மற்றவர்கள் மரியாதையாக நடந்துகொள்வார்கள், நட்பு வட்டாரம் அதிகமாக இருக்கும் என்ற போக்கும் உலளவில் அதிகமாக இருக்கிறது. இதனை வெளிப்படையாக சொல்லும் ஒரு படம் தான் முகம்.
அழகே இல்லாத ஒருவன் திடீரென அழகாக மாறினால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் கடந்த 1999-ம் ஆண்டு வெளியானது. ஞானராஜசேகரன் என்பவர் இயக்கிய இந்த படத்தில், நாசர், ரோஜா, மணிவண்ணன், விவேக், தலைவாசல் விஜய், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் தோல்வியை சந்தித்தது.
/indian-express-tamil/media/media_files/2025/05/27/mugham-199-movie2-627730.jpg)
ரங்கன் (நாசர்) என்ற அசிங்கமான முகத்துடன் இருக்கும் ஒருவன், தான் வேலை செய்யும் இடம் முதல் வசிக்கும் இடம் வரை அனைவரிடமும் கடுமையாக திட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறான். நிரந்தர வேலையும் இல்லாததால், தான் வேலை செய்யும் அனைத்து இடங்களிலும், மோசமாக நடத்தப்படுகிறான். அவர் நேசிக்கும் பெண்கள் எல்லோருமே அவரை வெறுத்து ஒதுக்குகின்றனர். இதனால் கடுமையாக மன உளைச்சலில் இருக்கும் ரங்கனுக்கு ஒருநாள் ஒரு முகமூடி கிடைக்கிறது.
அந்த முகமூடியை அணிந்துகொண்டவுடன் ரங்கன் அழகாக மாறுகிறான். இந்த அழகான முகத்தை வைத்து அவனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது. சினிமாவில் நடித்து பெரிய நட்சத்திரமாக உயர்ந்துவிடுகிறான். இவன் முக அழகை பார்த்து, மாலினி (ரோஜா) என்ற பெண் காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். தனது அழகின் மூலம் பெயர் புகழ் பெற்று அழகான பெண்ணை திருமணமும் செய்துகொள்ளும் ரங்கன், ஒரு கட்டத்தில் அந்த முகமூடியை கலைத்துவிட முடிவு செய்கிறான். இதனால் அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தில் ரங்கன் என்ற கேரக்டரில் நாசர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அழகு தான் ஒருவனுக்கு மரியாதையை கொடுக்கும். தனது கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மாலினி கேரக்டர், ஒரு அசிங்கமான முகத்தை பார்த்தால் என்ன செய்வார் என்பதை ரோஜா தனது நடிப்பின்மூலம் வெளிப்படுத்தியிருப்பார். வண்ண வண்ண பூக்கள் படத்திற்காக தேசிய விருது வாங்கிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மற்றொரு தேசிய விருதை வாங்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அழகை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், அப்போது பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளது. அதே சமயம் இப்போது இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றாலும் அது முடியாது. ஏனென்றால் இந்த படம் எந்த ஒடிடி தளத்திலும், யூடியூப் தளத்திலுமே இல்லை.