தான் இயக்கிய படங்களில் கேமியோ கேரக்டர்களில் நடித்து வந்த இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர், நடிகர் ரஜினிகாந்த் மறுத்ததால் தானே ஹீரோவாக நடித்திருக்கிறார். அது என்ன படம் என்பதை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர், 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.
இந்த படத்தை இயக்கியது இவர் தான் என்றும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இயக்குனர் பெயர் மாற்றப்பட்டது என்றும், இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்த டி.ராஜேந்தர், 1983-ம் ஆண்டு தாய் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
இந்த படத்தில் அவர் நடித்த ஜெயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தான் தயாரித்து இயக்கிய அனைத்து படங்களிலும் தானே ஹீரோவாக நடித்துள்ள டி.ராஜேந்தர், கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், என பல பணிகளை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி.ராஜேந்தர், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.
1983-ம் ஆண்டு வெளியான உயிருள்ளவரை உஷா திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் நடிகை நளினி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். சரிதா, கங்கா, ராதா ரவி, வெந்நிறஆடை மூர்த்தி, கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, டி.ராஜேந்தரே இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் ‘இதயமதை கோவில் என்றேன்’ என்ற பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.
இந்த படத்தின் கதையை எழுதிய டி.ராஜேந்தர், படத்தில் வரும் ஜெயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த்திடம் கேட்டுள்ளார். ஆனால் அப்போது அவர் அந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவிக்காத நிலையில், தானே இந்த படத்தில் அந்த ஜெயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க முடிவு செய்துள்ளார். டி.ஆர். அவர் நினைத்தபடி படத்தில் நடிக்க படமும் பெரிய வெற்றியை பெற்றது. ரஜினிக்கு சொன்ன கதையின் டைட்டில் ஜெயின் ஜெயபால். ஆனால் தான் நடிக்க வந்ததால் தனது மனைவிக்காக உயிருள்ளவரை உஷா என டைட்டில் மாற்றியதாக தகவல்கள் உள்ளது.
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் பெரிய வெற்றியை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மறுத்ததால், அந்த படத்தில் அவர் நடிக்க இருந்த கேரக்டரரை தானே ஏற்று நடித்த டி.ராஜேந்தர் பின்னாளில் தனது இயக்கம் மற்றும் நடிப்பில் பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.