`உடன்பிறப்பே' படத்தின் இயக்குநர் இரா.சரவணன் இல்ல விழா பட்டுக்கோட்டை அருகே உள்ள துறவிக்காடு கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் அ.வினோத், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட இயக்குனர் அ.வினோத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
நான், இயக்குநர் இரா.சரவணனின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். இந்த ஊரின் இயற்கையான சூழல், தென்னை மரங்கள் போன்றவை இங்கேயே செட்டிலாகலாம் என நினைக்க வைக்கிறது. அடுத்து கமல் சாருடன் சேர்ந்து படம் பண்ண உள்ளேன். அது விவசாயம் தொடர்பான படம் இல்லை. அவருடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அந்தப் படத்தை தயாரிக்கிறது.
கமல் சாரிடம் இரண்டு, மூன்று கதைகள் பேசினோம். ஆனால் அவர் சொன்ன கதைகள் ரொம்பவே இன்ரஸ்டிங்காக இருந்தது. அந்த கதைக்கு திரைக்கதை எழுதி படமாக்குகிறோம். வெளியூரில் இருந்ததால் மாமன்னன் படத்தை இன்னும் பார்க்கவில்லை. விவசாயத்தின் மீது எனக்கு ஆர்வம் இருக்கிறது. மறைந்த நெல் ஜெயராமன் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்த பிறகு பாரம்பர்ய நெல்லை மீட்டெடுக்க அவர் செய்த செயல்கள் குறித்து எனக்கு தெரிய வந்தது.
இதையடுத்தே அவர்களை கமல் சாரிடம் அழைத்து சென்று நெல் ஜெயராமன் குறித்த விஷயங்களை எடுத்து சொன்னோம்.அதை கேட்ட கமல் சார் நிறைய ஐடியாக்களை கொடுத்திருக்கிறார். பாரம்பர்ய நெல்களுக்காக ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு நெல்லிலும் என்ன வகையான சத்துக்கள் இருக்கிறது என்பதை அறிய வேண்டும். எதிர்காலத்தில் இவற்றை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நிறைய உண்மைக் கதைகள் படமாக எடுக்கப்பட்டுள்ளது. நான் இனி உண்மையாகப் போற கதைகளை படமாக எடுக்க இருக்கிறேன்" என்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.