ரஜினிகாந்தின் ஜெயலர் படத்தின் காவாலா பாடல் பட்டி தொட்டி எங்களிலும் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை தமன்ன ஜெயிலர் படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், விநாயகன், ஜாக்கி ஷெரப், தமன்னா உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி (நாளை) ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே கடந்த ஜூலை 6-ந் தேதி வெளியான ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் தமன்னாவின் நடனம் பலரையும் கவர்ந்த நிலையில், பாராட்டுக்களையும் பெற்றது,
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தமன்னா தான் ஜெயிலர் படத்தில் இணைந்தது எப்படி என்று பேசியுள்ளார். இதில், நான் வெக்கேஷனுக்காக தாய்லாந்து சென்றிருந்தபோது இயக்குனர் நெல்சன் என்னை தொடர்புகொண்டு பேசினார். ஜெயிலர் படம் பற்றி சொல்லி இதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் உடனடியாக சம்மதம் சொல்லிவிட்டேன். இதற்கு முக்கிய காரணம். ஜெயிலர் ரஜினிகாந்த் படம் என்பதால் தான் என்று கூறியுள்ளார்.
மேலும் ரஜினியுடன் நடித்தது குறித்து பேசியுள்ள தமன்னா, நான் முதன்முறையாக ரஜினிகாந்தை படத்தின் செட்டில் தான் சந்தித்தேன். சூப்பர் ஸ்டார் நடிகர் மிகவும் எளிமையாக இருக்கிறார். எனது 17 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, நெல்சன் திலீப்குமார் தனக்கு அந்த வாய்ப்பை வழங்கியபோது, அதை உடனடியாக ஏற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.