சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவருக்கும் சினிமா மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளது. ஒரு கருத்தை வெளிப்படையாக பலரும் தெரிந்துகொள்ளும் வகையில் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு சினிமா என்ற பொழுதுபோக்கு அம்சம் தான் முக்கிய வழி. இதேபோல் திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கும் இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.
கடந்த காலங்களில் சினிமா ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் சாதாரண மக்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். இன்டர்நெட் சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி பலரும் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் தங்கள் சொல்ல வரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவை மக்கள் மத்தியில் எளிதில் கவரவும் செய்கிறது.
இந்த வகையில் மற்றொரு முக்கிய அம்சம் குறும்படம் என்று சொல்லலாம். சினிமா இயக்குனராக வர வேண்டும் என்றால் பெரிய இயக்குனரிடம் உதவியாளராக பணியாற்றி அதன்பின்தான் படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற காலம் கடந்து தற்போது ஒரு நல்ல கதையம்சம் கொண்ட குறும்படம் எடுத்தால் மக்கள் மத்தியில் எளிதில் ரீச் ஆகிவிடலாம் என்பதற்கு தற்போதைய சில தமிழ் சினிமா இயக்குனர்களே முக்கிய உதாரணமாக உள்ளனர்.

இந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகி தஞ்சை கொற்றவை குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான முதல் பரிசை பெற்ற குறும்படம் கர்வம் கொள். விளையாட்டு அனைவருக்கும் பொதுவானது. எந்த சாதி, மதமாக இருந்தாலும் விளையாட்டில் சாதிக்க ஆர்வமும் திறமையும் இருந்தாலே போதுமானது என்பதை வலியுறுத்தும் இந்த குறும்படத்தை இயக்குனர் சென் இயக்கியுள்ளார்.
ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்த பெண் ஒரு பாக்ஸர் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை அப்பாவிடம் சொல்லும்போது அவர் அதற்கு தடை போடுகிறார். அதே சமயம் அவருக்கு திருமணமும் செய்து வைக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தைக்கு தாயாகும் அந்த பெண் தனது கனவை நினைத்து ஏங்கும் தருணத்தில் அவரது மகளுக்கும் தான் பாக்ஸர் ஆக வேண்டும் என்ற ஆசை வருகிறது. மகள் தன் அம்மாவிடம் தனது ஆசையை சொல்லும்போது அவர் அதற்கு என்ன முடிவு செய்கிறார் என்பதை விவரிக்கிறது கர்வம் கொள். இரண்டு நேஷ்னல் பாக்ஸர்கள் நடித்துள்ள இந்த குறும்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக அக்குறும்படத்தின் இயக்குனர் சென்- னை தொடர்புகொண்டோம்.
இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. சுமார் 4 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். அப்பர் க்ளாஸ் மக்களுக்கும் தடைகள் இருக்கு. அதிலும் ஒரு பெண் தனது ஆசையை வெளிப்படுத்தும்போது அவருக்கு எங்கெல்லாம் தடைகள் இருக்கு அதை எப்படி உடைத்து வெளியே வருகிறார். அதற்கு அவரது அம்மாவின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறேன்.
இதில் குறிப்பாக அந்த பெண்ணின் அம்மா தனது ஆசையை வெளிப்படுத்தும்போது அவருக்கு அவரது அம்மா ஆதரவாக நிற்கவில்லை. ஆனால் இவர் தற்போது தனது மகளுக்கு ஆதரவாக நிற்கிறார். ஆணாதிக்கம் எப்படியெல்லாம் பெண்களுக்கு தடை போடுகிறது என்பதையும், விளையாட்டு பொதுவானது யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பதை வலியுறுத்துவதற்காகவே இதை செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்த கதைக்கு பாக்ஸிகை தேர்வு செய்ய காரணம் என்ன?
இது ஒரு உண்மை சம்பவம். 4வருடங்களுக்கு முன்பு நான் ஒரு பார்க்கில் என்து நண்பருக்காக காத்திருந்தபோது, ஒரு அம்மா தனது பேரனை ஸ்கேட்டிங் விளையாட அழைத்து வந்து அவரை விளையாட விட்டுவிட்டு அங்கே அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் நிறைய ஸ்போர்ஸ் இருக்கும்போது நீங்கள் ஏன் ஸ்கேட்டிங்கை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர், எனது மகளும் மருமகனும்தான் பேரன் விஷயத்தில் முடிவெடுப்பார்கள் என்று சொன்னார் அதன்பிறகு பேசிக்கொண்டிருந்தபோது கடைசியாக நான் கூட சின்ன வயதில் பாக்ஸிக் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அப்போது எங்க அப்பா அதற்கு ஒப்புகொள்ளவில்லை. அதன்பிறகு எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொன்னார். ஒருவேளை உங்க அப்பா அன்றைக்கு தடுக்காமல் இருந்திருந்தால் இப்போது நீங்க என்னவா இருந்துருப்பீங்க என்று கேட்டபோது அவர் யோசிக்காமல் ஒரு பேங்க் அல்லது ரயில்வேயில் கோச்சாக இருந்திருப்பேன் என்று சொன்னார்.
ஒரு விஷயத்தை நாம் அடக்கும்போது அவர்கள் தெரிந்தேதான் அடங்குகிறார்கள் என்பது அவர் பேசிய வார்த்தையில் இருந்து தெரிந்தது. அப்போது ஏன் அவர்களை அடக்க வேண்டும் அவர்கள் விருப்பத்திற்கு விட்டால் என்ன என்று யோசித்தேன். அதன்பிறகுதான் இந்த கதையை படமாக்க முடிவு செய்தோம். கதையை நம்பித்தான் நாங்கள் களத்தில் இறங்கினோம்.
இந்த படத்தை பிரீமியர் பண்ணும்போது உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத கமெண்ட்ஸ்?
இந்த படத்தை 2 முறை பிரசாத் லேபில் திரையிட்டோம். பெண்களுக்கான முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தை பார்க்க வந்த பலரும் படம் நன்றாக வந்திருக்கிறது என்று தான் சொன்னார்கள். ஆண் பெண் என இருபாலருமே படத்திற்கு நல்ல ரிவியூ கொடுத்தார்கள் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“