தமிழ் கிளாசிக் சினிமாவின் வசனங்களுக்காக ராஜா என்ற சொன்னால் அது கண்டிப்பாக சிவாஜி கணேசன் தான். 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய சிவாஜி கணேசன் முதல் படத்திலேயே வசன கர்தா கருணாநிதியின் முழுநீள வசனத்தை அசால்ட்டாக பேசி கைத்தட்டல்களை பெற்றிருப்பார்.
அதேபோல் முதல் படத்திலேயோ யாருடா இந்த நடிகர் என்று கேட்கும் அளவுக்கு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்த சிவாஜி கணேசன் அதன்பிறகு தான் நடித்த அத்தனை படங்களிலும் நீளமான வசனம் பேசி அசத்தியிருப்பார். வசனங்கள் பேசியதால் மட்டும் சிவாஜி .பெமஸ் ஆகவில்லை. கூடவே அவரின் அசாத்தியமான நடிப்பும் தான் அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
தனது நடிப்பு மற்றும் முழுநீள வசனத்தையும் ஒரு டேக்கில் அடித்து காலி பண்ணும் திறமையும் தான் நடிகர் திலகம் என்ற நடிப்பு பல்கலைகழகம் குறித்து இன்னும் நம்மை பேச வைத்துக்கொண்டிருக்கிறது. புராணங்களில் வரும் கடவுள்களையும், சுதந்திர போராட்ட தியாகிகளையும் தனது நடிப்பின் மூலம் கண் முன் நிறுத்திய சிவாஜி கணேசன், பாசமலர், தெய்வமகன், வீரபாண்டிய கட்டபொம்மன் என தனது அசத்திய நடிப்பில் கவர்ந்திருப்பார்.
இதில் உண்மையில் சுதந்திரபோராட்ட தியாகியான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டியது. ஆனால் படத்தின் இறுதியில் கட்டபொம்மன் சாக வேண்டும் என்பதால் எம்.ஜி.ஆர் அந்த கேரக்டரில் இருந்து விலகியதை தொடர்ந்து சிவாஜிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. அவரும் தனது அசாத்திய நடிப்பு திறமையின் மூலம் கட்டபொம்மனுக்கு உயிர்கொடுத்திருப்பார்.
இப்படி நடிப்பு மற்றும் வசனங்களால் பெயர் பெற்ற சிவாஜியை வெறும் உடல்மொழி மற்றும் சின்ன சின்ன வசனங்கள் பேசி நடிக்க வைத்த பெருமை குரு சிஷ்யன் இயக்குனர்களுக்கு உண்டு என்பது பலருக்கும் தெரியாத உண்மை. 1984-ம் ஆண்டு வெளியான தாவணி கனவுகள் படத்தில் சிவாஜி ஒரு எக்ஸ் மிலிட்டரி மேனாக சைக்கிள் ரிப்பேர் கடை நடத்தி வருவார்.
5 தங்கைகளுக்கு அண்ணனாக வேலையில்லா பட்டதாரி கேரக்டரில் வரும் நடிகர் பாக்யராஜ் தான் இந்த படத்தின் இயக்குனரும் கூட. அதற்கு முன்பு தனது படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசி அசத்திய சிவாஜி கணேசனுக்கு இந்த படத்தில் பெரியதாக வசனங்கள் இல்லை. அதே போல் படப்பிடிப்புக்கு முன்பே வசனங்கள் எழுதி நடிகர்களுக்கு கொடுக்கும் பழக்கம் பாக்யராஜூவுக்கும் இல்லை.
பாக்யராஜ் அனைத்துமே ஷூட்ங் ஸ்பாட்டில் தான் செய்வார். அதேபோல் தாவணி கனவுகள் படத்திலும் செய்தது சிவாஜிக்கு புதிதாக இருந்தது. அவருக்கு படத்திலும் பெரிதாக வசனங்கள் இல்லை. மேலும் படத்தில் காமெடிக்கு குறைவில்லை என்று சொல்லும் அளவுக்கு சிவாஜி வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பலையாக இருக்கும். இதற்கு அத்தனை க்ரிடீட்டும் பாக்யராஜூவுக்கு தான்.
தாவணி கனவுகள் படம் வெளியானபோது சிவாஜியை பலரும் புதிய கோணத்தில் பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தனது நடிப்பில் வித்தியாசம் காட்டியிருப்பார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. தனது நீண்ட வசனம் பேசிய சினிமா அனுபவத்தை யோசித்து பார்த்த சிவாஜி, எப்படிடா இப்படியெல்லாம் படமெடுத்து ஹிட் கொடுக்குறீங்க என்று ஆச்சரியடைந்துள்ளார்.
அதற்க அடுத்து 1985-ம் ஆண்டு பாக்யராஜூவின் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் முதல் மரியாதை படத்தில் நடித்திருந்தார் சிவாஜி. சிஷ்யனாவது படத்தில் அங்காங்கே சில வசனங்கள் கொடுத்தான். ஆனால் குரு பாரதிராஜா முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு வசனங்களே கொடுத்திருக்க மாட்டார். படம் முழுக்க சிவாஜி தனது முகபாவனைகளாலே நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு கேரக்டராக வாழ்ந்திருப்பார்.
முதல் மரியாதை படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்த வடிவுக்கரசிக்கு பக்கம் பக்கமாக வசனங்கள் இருக்கும். ஆனால் வருக்கு பதில் சொல்லும் கேரக்டராக சிவாஜி தனது முகபானைகளை வைத்தே பதில் சொல்லும்படிதான் கதை அமைந்திருக்கும். படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. முழுநீள வசனத்திற்கு பெயர் பெற்ற சிவாஜிக்கு வசனங்களே இல்லாமல் ஹிட் கொடுத்த பெருமை பாரதிராஜா பாக்யராஜ் என்ற குரு சிஷ்யன்களையே சாரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.