ரோடு சரியில்லை ஆனால் டோல்கேட்டில் காசு மட்டும் வசூல் செய்கிறீகள் என்று பிரபல இயக்குனர் டேல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக க/பெ ரணசிங்கம், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் படத்தில் எழுத்தாளராக பணியாற்றியவர் சண்முகம் முத்துசாமி. அதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான அடங்காதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் டீசல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் சண்முகம் முத்துசாமி திருச்சி அருகில் டேல்கேட் ஊழியர் ஒருவருடன் ரோடு சரியில்லை என்று வாக்குவாதம் செய்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. சென்னையில் இருந்து காரின் மூலம் சாலையில் சென்ற இவர், புதுக்கோட்டை அருகே பூதக்குடி பகுதியில் உள்ள டேல்கேட் நோக்கி சென்றபோது வழி நெடுக்கிலும் சாலை குண்டும் குழியுமாக இருந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து டோல்கேட் பகுதிக்கு வந்த அவரிடம் டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் வசூல் செய்துள்ளனர். அப்போது வழி நெடுக்கிலும் சாலை மோசமாக உள்ளது. இதற்கு ஏன் காசு கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு அந்த ஊழியர் இதை எங்களிடம் சொல்ல கூடாது என்றும், நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேளுங்கள் என்று சொல்கிறார்.
ஆனால் நீங்கள் தான் காசு வாங்குறீங்க அதனால உங்கள்டதான் கேக்கனும் என்று இயக்குனர் சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. இதில் இயக்குனர் சண்முகம் முத்துசாமி தான் 3 முறை புகார் அளித்துள்ளதாக கூறுகிறார். இது தொடர்பான வீடியோவை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர், மோசமான சாலைக்கு ஏன் சுங்கவரி கட்ட வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை டேக் செய்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“