/indian-express-tamil/media/media_files/2025/09/24/panju-2025-09-24-15-01-07.jpg)
கல்யாண வீட்டில் இந்தப் பாட்டுக்கு தனி இடம்... எழுதியது கவிஞர் இல்ல; யாருன்னு தெரியுமா?
தமிழ் திரையுலகின் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் பஞ்சு அருணாச்சலம். தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். தனது தனித்துவமான பங்களிப்பால் சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர்.
சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அவரது பயணம், இன்றுவரை பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. பஞ்சு அருணாச்சலம் அவர்களின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, இசைஞானி இளையராஜாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது.
அப்போது ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக இருந்த இளையராஜாவை அடையாளம் கண்டு, தனது ’அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் அவருக்கு முதல் வாய்ப்பு வழங்கினார். இந்த ஒரு சந்திப்பு, தமிழ் சினிமாவின் இசை வரலாற்றையே புரட்டிப் போட்டது.
பஞ்சு அருணாச்சலம் தனது பி.ஏ. ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், புதுமையான கதைக்களங்களைக் கொண்டவையாகவும் இருந்தன.
ரஜினி மற்றும் கமல் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களையும் ஒரே படத்தில், இரட்டை வேடங்களில் நடிக்க வைத்த ’அபூர்வ ராகங்கள்’, கிராமிய பின்னணியில் அமைந்த ’கன்னிராசி’, ’கல்யாணராமன்’ போன்ற பல படங்களின் வெற்றிக்கு, அவரது கதை மற்றும் திரைக்கதை பங்களிப்பு முக்கிய காரணம் ஆகும்.
இந்நிலையில், பஞ்சு அருணாச்சலம் இன்று வரை கல்யாண வீடுகளில் ஒலிக்கும் தனது பாடல் குறித்த ரகசியத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “என் குடும்ப சூழ்நிலை காரணமாக சில வாய்ப்புகளை தேடிச் சென்றேன். பல படங்களுக்கு டப்பிங் எழுதியிருக்கிறேன். அப்போது ஆரூர் தாஸ் தான் டப்பிங் எழுதுவதில் கிங். நிறைய படங்கள் அவர்கள் தான் எழுதுவார்கள்.
எனக்கு இரண்டோ மூன்றோ படம் கிடைக்கும். அந்த ஆயிரம் ரூபாய் எனக்கு அப்போது பெரிய பணம்.
பெரிய கம்பெனிகளில் ஒருவர் கதை சொல்லுவார். நிறைய பேர் அது குறித்து கருத்து தெரிவிப்பார்கள். அப்படி எனக்கு தெரிந்த கம்பெனிகளில் கருத்து தெரிவிப்பதற்கு நானும் வரட்டுமா என்று கேட்பேன். அவர்கள் அழைத்தல் அங்கு சென்று எனக்கு தெரிந்த ஐடியாக்களை சொல்வேன்.
அப்படி சொல்லும் பொழுது நன்றாக சொல்கிறார் என்று என்னை அடிக்கடி கூப்பிடுவார்கள். கவிஞர் கண்ணதாசன் உடன் செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் நான் தனியாக முயற்சி செய்தேன். பல இடங்களில் கதைகளெல்லாம் சொல்லியிருக்கிறேன். என் கதைகளை கேட்டு பலர் படம் இயக்கியிருக்கிறார்கள். ஆனால் அது சிறிது காலத்தில் நின்றுவிட்டது.
ஒரு நேரம் ’சாரதா’ திரைப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் அப்படத்தை இயக்கி கொண்டிருந்த போது கவிஞர் கண்ணதாசன் எல்லா பாடல்களும் எழுதிவிட்டார். டைட்டில் எல்லாம் முடித்துவிட்டார்கள். படம் பார்த்துவிட்டு இயக்குநர் கோபால கிருஷ்ணன் ஒரு கல்யாண வரவேற்பு பாடல் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
அப்போது கவிஞர் கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது மகாதேவன் சார் பஞ்சு அருணாச்சலத்தை பாட்டை எழுத சொல்லலாம் என்று சொல்லியுள்ளார். அதன்பின்னர், என்னை பாட்டை எழுத சொன்னார்கள். நானும் பாட்டு எழுதிக் கொடுத்தேன். அந்த பாட்டு தான் ‘மணமகளே மருமகளே வா வா’ பாடல். அந்த காலத்தில் எல்லா கல்யாண வீட்டிலும் இந்த பாடல் தான் ஒலித்தது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.