ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படம், மும்பையில் உள்ள தாராவி பகுதியை மையப்படுத்தி தயாராகவுள்ளதாக கூறப்பட்டது. மும்பையில் உள்ள நிழல் உலக தாதா ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், மும்பை 'தாதா' ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு ஒரு மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில், "என்னுடைய வளர்ப்புத் தந்தை, ஹாஜி அலிமஸ்தான் 'பாரதிய மைனாரிட்டி சுரக்ஷா மஹாசங்' என்ற கட்சியை நிறுவியவர். இயக்குநர் ரஞ்சித், உங்களை வைத்து எடுக்கிற படத்தில் என்னுடைய தந்தையை மும்பையின் கள்ளக் கடத்தல் தலைவனாகவும், நிழலுலக தாதாவாகவும் சித்தரித்துக் காட்ட உள்ளதாக பத்திரிகைகளில் படித்தேன். இது வேண்டாத வீண் வேலை. என் தந்தை மீது குற்றச் செயலுக்காக எந்த கோர்ட்டும் தண்டனை அளிக்கவில்லை. தேவையில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப்படுத்தினால், அதன் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்" என்று மிரட்டியுள்ளார்.
ரஜினியின் வீட்டு முகவரிக்கே இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.