‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகியதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘சாமி’. விக்ரம் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும், விவேக், கோட்டா சீனிவாச ராவ், ரமேஷ் கண்ணா, விஜயகுமார், மனோரமா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார்.
‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம், ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால், சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக த்ரிஷா அறிவித்தார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீம் புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து விளக்கம் கேட்டு த்ரிஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள த்ரிஷா, “நான் இன்னும் ஒருநாள் கூட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை. வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தந்துவிடுகிறேன். என் சொந்தக் காரணங்களுக்காகவே படத்தில் இருந்து விலகினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
‘சாமி ஸ்கொயர்’ படத்தில் காமெடியனாக சூரி நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். மேலும், பிரபு, சதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த வந்த ப்ரியன், சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். எனவே, அடுத்து யார் ஒளிப்பதிவு செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Trisha explains why she walk out from saamy square film