தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி 2’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி ரிலீஸான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். மேலும், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ், காளி வெங்கட், மைம் கோபி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்திருந்தார்.
‘மாரி’ படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ராதிகா சரத்குமாரின் ‘மேஜிம் ஃபிரேம்ஸ்’ இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்தன. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இருந்தது. படத்தில் இடம்பெற்ற ‘செஞ்சிருவேன்…’ டயலாக், குழந்தைகள் வரை பிரபலமடைந்தது. அத்துடன், தனுஷின் தாடி – மீசை ஸ்டைலை நிறைய இளைஞர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர்.
எனவே, ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தன. பாலாஜி மோகன் இயக்க, சாய் பல்லவி தனுஷ் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த ரோபோ சங்கரும் இரண்டாம் பாகத்தில் தொடர்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 10 வருடங்கள் கழித்து தனுஷ் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன்.
இந்தப் படத்தில் கிருஷ்ணா முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கேரக்டரில் கமிட்டாகியுள்ளார்.
‘விக்ரம் வேதா’, ‘சத்யா’, ‘நிபுணன்’ என இந்த ஆண்டு வரலட்சுமிக்கு குறிப்பிடத்தக்க படங்கள் ரிலீஸாகின. தற்போது விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிவரும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் வரலட்சுமி.