தமிழ், ஹிந்தி உள்பட ஏகப்பட்ட படங்களை இயக்கிய மலையாள இயக்குநர் ஐ.வி.சசி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தவர் ஐ.வி.சசி. இருப்பம் வீடு சசிதரன் என்பது அவருடைய முழுப்பெயர். 1968ஆம் ஆண்டு வெளியான ‘கலியல்ல கல்யாணம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசி, ‘அவளோட ராவுகள்’ படத்தின் மூலம் புகழ்பெற்றார்.
இதுவரை 150 மலையாளப் படங்களுக்கும் மேல் இயக்கியுள்ள சசி, தமிழ் மற்றும் ஹிந்தியிலும் சில படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனை வைத்து ‘குரு’ மற்றும் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படங்களை இயக்கியவர், ரஜினிகாந்தை வைத்து ‘காளி’ படத்தை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய ‘ஆரூடம்’ படத்திற்காக, தேசிய ஒருங்கிணைப்புக்கான தேசிய விருது பெற்றார். கேரள அரசின் 4 மாநில விருதுகளைப் பெற்றுள்ள சசி, 2015ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளார்.
69 வயதான ஐ.வி.சசி, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவருடைய மனைவியான சீமாவும் சினிமா நடிகைதான். இன்று காலை சசிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
“என்னுடைய 45 ஆண்டு கால நண்பர் ஐ.வி.சசி இப்போது உயிரோடு இல்லை. சிறந்த டெக்ஷீனியனை இழந்து நானும், சினிமாத்துறையும் துயரப்படுகிறோம். என்னுடைய சகோதரி சீமா சசிக்கு என் ஆதரவும், அன்பும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.