சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. சுந்தீப் கிஷண், விக்ராந்த், மெஹ்ரீன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றும் போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால் நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
உங்களுடைய படங்களில் இரண்டாம் பாகம் எடுத்தால், எந்தப் படத்தை எடுப்பீர்கள்?
முதல் பாகம் எடுக்கும்போது இருக்கும் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும், இரண்டாம் பாகம் எடுக்கும்போது குறைந்துவிடும். அதனால், நான் முதல் பாகம் எடுக்க மாட்டேன். இதுவரை இரண்டாம் பாகம் எடுத்த படங்களில், சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஒருவேளை நான் இரண்டாம் பாகம் எடுத்தால், 'பாண்டிய நாடு' படத்தை மட்டும் எடுப்பேன்.
பெண்களை மையப்படுத்திய படங்களை எப்போது எடுக்கப் போகிறீர்கள்?
புதுமுகங்களை வைத்து தற்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் 'ஏஞ்சலினா' படம், இந்தக் கேள்விக்கு விடையாக இருக்கும்.
சென்சார் போர்டு, சினிமாவின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்கிறீர்களா?
சினிமா தெரியாதவர்கள் கூட சென்சார் போர்டில் இருப்பது தான் வேதனையான விஷயம். ஃபிரேமுக்குள் தூரமாக புகை தெரிந்தால் கூட, அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என்கிறார்கள். அது சிகரெட் புகைதான் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். சுண்டல் விற்கும் வண்டியில் இருந்துதான் அந்தப் புகை வருகிறது என்று சொன்னால் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
விஷால், கார்த்தி தாண்டி அடுத்தகட்ட ஹீரோக்களை வைத்துப் படம் இயக்காதது ஏன்?
யாரும் எனக்கு கால்ஷீட் தரவில்லை. சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அவருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். விஜய்யிடம் கதை சொல்ல அப்பாயின்ட்மெண்ட் கேட்டேன், தருவதாகச் சொன்னார். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. அஜித்திடமும் கதை சொல்ல அப்பாயின்ட்மெண்ட்டுக்கு முயற்சி செய்து வருகிறேன், இதுவரை கிடைக்கவில்லை.