மணிரத்னம் இயக்கும் இன்னும் பெயர் வைக்கப்படாத மல்ட்டி ஸ்டாரர் படத்தில், விஜய் சேதுபதி போலீஸாக நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு, விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கும் மல்ட்டி ஸ்டாரர் படத்தை இயக்க இருக்கிறார் மணிரத்னம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்துக்காக முன்கூட்டியே பயிற்சியெல்லாம் கொடுத்து விட்டார் மணிரத்னம். பயிற்சியின்போது மணிரத்னத்துடன் சிம்பு போட்டோ எடுத்து வெளியிட்டது நினைவிருக்கலாம். இந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
இந்நிலையில், விஜய் சேதுபதி என்னவாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. படம் முழுவதும் வரக்கூடிய போலீஸ் கேரக்டரில் அவர் நடிக்கிறார் என்கிறார்கள். ஏற்கெனவே ‘சேதுபதி’ படத்தில் போலீஸாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. ஆனால், மணிரத்னத்தின் போலீஸுக்கும், ‘சேதுபதி’ படத்துக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும் என்பதால், இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் விஜய் சேதுபதி ரசிகர்கள்.
சமீபத்திய பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘விக்ரம் வேதா’ படத்தில், போலீஸ் அதிகாரியாக மாதவன் நடிக்க, தாதாவாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், அடுத்து அவர் போலீஸாக நடித்தாலும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அந்த அளவுக்கு விஜய் சேதுபதியின் நடிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.