/tamil-ie/media/media_files/uploads/2019/03/MOVIE.jpg)
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கி விட்டு, 8 ஆண்டுகள் கழித்து
Super Deluxe Movie Review - 2011ம் ஆண்டு ஒரு படம் ரிலீஸ் ஆகிறது, அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அது அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. சில வருடங்கள் கழித்து அந்த படம் டிவியில், இன்டர்நெட்டில் வெளியிடப்படுகிறது. சினிமா ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடுகிறார்கள். இப்படி ஒரு படத்தை நாம் ஏன் கௌரவிக்க மறந்தோம் என புலம்புகின்றனர்.
நான் அந்த படத்தை டிவியில் பார்த்த அனுபவத்தை நான் பார்த்த பல தமிழ் படங்கள் ஏற்படுத்தவில்லை. இந்த இயக்குனர் அடுத்து எடுக்கும் படத்தை கண்டிப்பாக முதல் நாள் பார்த்துவிடவேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். வருடங்கள் தான் கடந்தது, ஆனால் அந்த இயக்குனர் படம் பண்ணவில்லை. ஐந்து வருடங்கள் கழித்து அதே இயக்குனர் ஒரு படத்தை இயக்குகிறார், அது ரெண்டு வருடங்கள் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகிறது, இன்று உலகமே அந்த படத்தை கொண்டாடுகிறது.
எட்டு வருடங்களுக்கு முன்பு ரிலீசான அந்த படம் ஆரண்ய காண்டம், அந்த படத்தை இயக்கியவர் இப்பொழுது ரிலீஸாகி இருக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா.
சூப்பர் டீலக்ஸ் எதை பற்றி பேசுகிறது? கடவுள்? காதல்? காமம்? உறவு? இல்லை, அது வாழ்க்கையை பேசுகிறது. உடனே இது எதோ ரொம்ப சீரியசான படம் என்று நினைத்துவிடாதீர்கள், படம் முழுக்க சிரிப்பு அலை தான். 'ப்ளாக் காமெடி' என்று ஒரு வகை சினிமா உள்ளது தெரியுமா? அந்த வகையை சேர்ந்தது தான் இந்த படம்.
படம் நான்கு பேருடைய வாழக்கையில் பயணிக்கிறது. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையை அவர்களுக்கு தெரிந்த நியாமான முறையில் வாழ்கிறார்கள், அவர்களுக்கு சரி, மற்றவர்களுக்கு? இந்த முதல் கதையை எடுத்து கொள்ளுங்கள். வேம்பு(சமந்தா) தன் கணவருடன்(ஃபஹத் பாசில்) மகிழ்ச்சியாக இல்லை. அவளுக்கு வேறு ஒரு துணை தேவைப்படுகிறது, தன் முன்னாள் காதலனுடன் பேசுகிறாள், அவன் மீது அன்பு கொள்கிறாள். அவனை தன் கணவன் இல்லாதபொழுது வீட்டிற்கும் அழைக்கிறாள். ஆனால் அவளுக்கு பேர் அதிர்ச்சியை ஒரு சம்பவம் நிகழ்த்துகிறது.
இரண்டாவது கதை ஷில்பாவை(விஜய் சேதுபதி) சுற்றி நகர்கிறது. ஷில்பா ஒரு திருநங்கை, திருமணம் முடிந்த சில வருடங்கள் கழித்து தன் மனைவி, குழந்தையை தவிக்கவிட்டு மும்பைக்கு சென்ற மாணிக்கம், ஷில்பாவாக திரும்புகிறாள். "நமக்கு ஏத்த மாதிரி நகம் வெட்டிக்கிறோம், நமக்கு ஏத்த மாதிரி முடிவெட்டுகிறோம், எனக்கு புடிச்ச மாறி என் உடம்ப நான் மாத்திகிட்டேன், இதுல என்ன தப்பு இருக்கு?" இது ஷில்பாவின் கருத்து.
மூன்றாவது கதை ஒரு நான்கு பேரை சுற்றி நகர்கிறது. அந்த நான்கு வாலிபர்கள் ஒரு ஆபாச படம் பார்க்க ஆசைப்படுகிறார்கள். அந்த படத்தை வீட்டில் யாரும் இல்லாதபொழுது பார்க்கும் அந்த நான்கு பேரில் ஒருவனுக்கு அதிர்ச்சி! அந்த படத்தில் வரும் நடிகை (ரம்யா கிருஷ்ணன்) தன் தாய் என அவனுக்கு தெரிந்துவிடுகிறது! தன் பிழைப்பிற்காக நடித்த லீலா(ரம்யா கிருஷ்ணன்) இப்பொழுது தன் மகன் மட்டுமே உலகம் என்று இருக்கிறாள், காரணம் அவளின் கணவன் அற்புதம்(மிஷ்கின்) கடவுளே கதி, கடவுள் தான் அனைத்தும் என்று குடும்பத்தை தவிக்கவிட்டு கடவுளின் புகழ்ப்பாடி திரிகிறான்.
வேம்புவிற்கு என ஆச்சு? ஷில்பாவை அவள் வீட்டில் ஏற்றுக்கொண்டார்களா? அற்புதமும் லீலாவும் இணைந்தார்களா? இந்த அணைத்து கேள்விகளுக்கும் பதிலை, இந்த கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக ஓட விட்டு ஒரு நெடுந்தூர பரவச பயணத்திற்கு அழைத்து செல்கிறார் இயக்குனர் குமாரராஜா.
ஒரு மூன்று மணி நேர திரைப்படத்தில் வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் அந்நியம், அசிங்கம், அநியாயம் என்று நினைத்து ஒதுக்கி வைத்தோமோ அது அனைத்துமே நம் வாழ்வில் சர்வசாதாரணம் தான் என்கிறார் இயக்குனர். நாம எங்கேயோ செய்கிற விஷயம் இன்னொருத்தரை பாதிக்கும் என்று படத்தில் ஒரு வசனம் வரும் அது வெறும் வசனம் அல்ல நாம் வாழ்க்கைக்கு அது பொருந்தும்.
படத்தின் வந்த (வாழ்ந்த) அத்தனை கதாபாத்திரங்களும் அத்தனை ஆழமாக, அழகாக இருக்கிறது.
ஷில்பாவாக விஜய் சேதுபதி மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நட்சத்திர அந்தஸ்த்தில் உள்ள ஒரு நடிகர் இந்த கதாபாத்திரத்தை ஏற்றதற்காகவே ஒரு சபாஷ் சொல்லலாம்! திருநங்கைகளை இத்தனை சிறப்பாக யாரும் தமிழ் சினிமாவில் காண்பிக்கவும் இல்லை, விஜய் சேதுபதி போல் யாரும் இத்தனை சிறப்பாக நடித்ததும் இல்லை. அவர் இதுபோல் இன்னும் பல பல கதாபாத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் கோரிக்கை.
ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அத்தனை சிறப்பாக இருக்கும், இந்த படத்தில் அவர் செய்திருக்கும் லீலாவும் அப்படித்தான். "நான் சாமியாவும் நடிச்சிருக்கேன், நீ பாத்தியே அந்த படமும் நடிச்சிருக்கேன். சாமியா பாக்குறவங்களுக்கு நான் சாமி, என்ன வேற மாரி பாக்குறவங்களுக்கு நான் அப்படி தான் தெரியுவேன். பாக்குறவங்க பார்வையில தான் எல்லாமே இருக்கு, நான் எப்பயுமே ஒரே லீலா தான்," என்று அவர் தன் மகனிடம் சொல்லும் ஒற்றை வசனம் அவரின் கதாபத்திரத்தை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
அதே போல, சமந்தா. இவரின் நடிப்பை தமிழ் சினிமா எந்த அளவு உபயோகப்படுத்தியுள்ளது? இத்தனை வருடத்தில் இது போல் கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்தது இல்லை. வேம்புவாக அவர் அழுது புரளும்பொழுது மிரட்டியிருக்கிறார். மலையாள சூப்பர்ஸ்டார் ஃபஹத் பாசில் இந்த படத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அசால்ட்டாக நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. சிரிப்பு/சீரியஸ் என வெரைட்டி காண்பித்து அசத்தியிருக்கிறார்.
படத்தில் வில்லனாக வரும் பகவதி பெருமாள் நடிப்பில் அத்தனை குரூரத்தை காண்பித்து இருக்கிறார். இவர் திரையில் தோன்றும்போதெல்லாம் அந்த காலத்து மக்களுக்கு எப்படி நம்பியாரை பார்த்தாலே கோவம் வருமோ அது போல் நமக்கும் வருகிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படத்திற்கு பிறகு ரசிகர்கள் மனதில் மறையாத ஒரு கதாபாத்திரத்தை செய்துள்ளார். இத்தனை பெரிய நடிகர்களுக்கு நடுவில் அனாயசமாக நடித்திருக்கிறேன் சிறுவன் அஸ்வந்த். ஒவ்வொரு வசனமும் பளிச் பளிச் என்று விழுகிறது, இந்த வயதில் நடிப்பில் இத்தனை வெரைட்டி காண்பித்திற்கும் அஸ்வந்த்திற்கு ஹாட்ஸ்ஆஃப்!
இயக்குனரை தவிர்த்து படத்திற்கு இரண்டு தூண்கள் என்றால் அது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நீரவ் ஷா மற்றும் வினோத். யுவனின் பின்னணி இசை கட்சியை மெருகு படுகிறது. ஒளிப்பதிவாளர்கள் உழைப்பை எத்தனை பாராட்டினாலும் மிகையாகாது. படத்தில் அத்தனை வண்ணங்கள்,அத்தனை கோணங்கள். நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்து சென்ற இவர்கள் அத்தனை பேருக்கும் நன்றிகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.