/tamil-ie/media/media_files/uploads/2017/10/IMG-20170119-WA0055.jpg)
சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த விமல், ‘பசங்க’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பின்னர் வெளியான ‘களவாணி’, அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது. ஆனால், அதன்பிறகு வெளியான படங்களில் ஒன்றிரண்டைத் தவிர எதுவும் பெரிதாகப் போகவில்லை.
‘வாகை சூடவா’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதுபெற்ற விமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மாப்பிள்ளை சிங்கம்’. கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியான இந்தப் படத்தில், அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். அதன்பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத விமல், ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், ரோபோ சங்கர், நாசர், ஜெயப்பிரகாஷ், நீலிமா ராணி, யோகிபாபு என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, ‘ஏ3வி’ நிறுவனம் மூலம் விமலே தயாரித்துள்ளார்.
பூபதி பாண்டியன் இயக்கியுள்ள ‘மன்னர் வகையறா’ படத்துக்கு, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ படத்துக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தை, அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர். அப்படியானால், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து ரீஎன்ட்ரியாகிறார் விமல். இந்தப் படத்தின் மூலமாவது விமலுக்கு நல்ல காலம் பிறக்கும் என நம்புவோமாக!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.