வரும் தீபாவளி அன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் ஒருசேர அமர்ந்து பார்க்க காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருக்கிறது. பாலிவுட் சூப்பர் ஹீரோ ஆமிர் கான், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்ச்சிதான் அது. அவரவர் துறைகளில் பெரும் ஜாம்பவான்களாக திகழும் ஆமிர் கான் மற்றும் விராட் கோலி இணைந்து கலந்துரையாடியிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இந்நிகழ்ச்சியை குறிப்பிட்ட சேனல் நெட்வொர்க், பல்வேறு சேனல்களில் தீபாவளியன்று ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/amir-khan-virat-kohli-1-292x300.png)
இந்த நிகழ்ச்சியில், இருவரும் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள், ரகசியங்கள், வெற்றி, தோல்விகள் குறித்து கலந்துரையாடியிருக்கின்றனர். ஊடகங்களிடம் அதிகம் முகம் காட்டாதவர் என்று பெயர் பெற்ற விராட் கோலி என்னென்ன பேசியிருக்கிறார் என்பது ரகசியமாகவே உள்ளது.
இருப்பினும், தன் காதலி அனுஷ்கா ஷர்மா குறித்து விராட் கோலி கூறிய ரகசியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீர் அல்லானா என்பவர் அந்நிகழ்ச்சியில் இருவரும் கூறிய சுவாரஸ்யமான தகவல்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தன்னை ஒரு இதழியலாளர் என குறிப்பிட்டுள்ளார். ஆமிர் கான் மற்றும் விராட் கோலி இருவரும் பங்கேற்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் சமீர் அல்லானா இருந்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் அனுஷ்கா ஷர்மா குறித்து விராட் கோலி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் சிலவற்றை சமீர் அல்லானா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் ஒரு ட்வீட்டில் விராட் கோலி பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டதாவது, “அனுஷ்காவின் நேர்மையான குணத்தையும், மற்றவர்களை அன்புடன் கவனித்துக்கொள்வதையும் நான் பெரிதும் விரும்புகிறேன். அவரிடம் நான் வெறுக்கும் விஷயம் இல்லை, ஆனால் பிடிக்காத விஷயம் ஒன்று உள்ளது. அனுஷ்கா எப்போதும் 5-7 நிமிடங்கள் தாமதமாகத்தான் வருவார்”, என பகிர்ந்தார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா பல சமயங்களில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல். அவ்வாறு வெளியே செல்லும்போது அனுஷ்கா காலதாமதம் செய்வார் என்பதையே விராட்கோலி இப்படி சொல்லியிருக்கிறார்.