தமிழ் கன் அட்மின் கெளரி சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஷால் நடிப்பில் ரிலீசாகி உள்ள துப்பறிவாளன் திரைப்படம் HD தரத்துடன் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்னை பைரசி பிரச்னைதான். படம் வெளியான அன்றே ஆன்லைனில் முழுப் படமும் வெளியாகி விடும். காவல்துறையில் கொடுக்கப்படும் புகார்களை அடுத்து திருட்டு விசிடி விற்பனை செய்பவர்கள், உரிமம் பெறாமல் கேபிள் டிவிகளில் படங்களை ஒளிபரப்பியவர்கள் மட்டும் அவ்வப்போது கைதுசெய்யப்பட்ட நிலையில் இணையத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில், புதுப் படங்களை பதிவேற்றும் "தமிழ் கன்", "தமிழ் ராக்கர்ஸ்" இணையதளத்தின் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று தகவல் வெளியானது. ஆனால், இந்த செய்தி இணையதளங்களில் பரவத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின்களால் இது பொய்யான தகவல் என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
எனினும், தமிழ் கன் இணையதளத்தின் அட்மினாகச் செயல்பட்ட கெளரி சங்கரை, காவல்துறை கைது செய்தது உறுதியானது. கெளரி சங்கரைப் பிடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கக் கண்காணிப்புக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் அளித்த தகவலின் படியே, கெளரி சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், காவல்துறை விசாரணையில், தான் அட்மின் இல்லை என முதலில் கெளரி சங்கர் கூறியதாகவும், பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கெளரி சங்கர் தான் உண்மையான அட்மினா என்பது அதன் பின்னரே தெரிய வரும்.
இதனிடையே, விஷால், பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த படம் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, HD தரத்துடன் இணையத்திலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கும் வேளையில் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.