VJ Chithra Suicide : சின்னத்திரை நடிகைகளுக்கு வெள்ளித்திரை நடிகைகளுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதில் குறிப்பிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்துக் கொண்டிருக்கும் சித்ராவை சொல்லலாம். பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.
1992-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி சென்னையில் பிறந்தார் சித்ரா. சித்ராவின் தந்தை காமராஜ், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஆவார்.. சித்ராவின் அண்ணன், தற்போது சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தது, மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தான்.
அதைத் தொடர்ந்து சன் டிவி, ஜீ தமிழ், வேந்தர் உள்ளிட்ட தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளின் சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருந்தார். பின்னர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலுநாச்சி என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவி-யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் வாய்ப்பு சித்ராவுக்கு கிடைத்தது. அதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் மையம் கொண்டார்.
இதற்கிடையே சித்ரா இன்று காலை தனியார் விடுதியில் தற்கொலை செய்துக் கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கம் விதவிதமான வண்ணமய படங்களுடன் காட்சியளிக்கிறது. எந்த பதிவிலும், வெறுப்போ, சோகமோ, துக்கமோ இல்லை. எல்லாமும் புன்னகை நிறைந்த புகைப்படங்கள். அவரது இந்த முடிவை பார்க்கும் போது தான், சித்ரா ஏதோ பிரச்னையில் இருந்தது தெரிய வருகிறது.
எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என எத்தனை பேர், எத்தனை முறை சொன்னாலும், வாழ்வில் கசப்பு தட்டும் அந்த நொடியில், மனம் அதனை மறந்து இப்படியான விபரீத முடிவை எடுத்து விடுகிறது. உள்ளுக்குள் வலிகளை மறைத்து, வெளியில் பொய்யான புன்னகை வேண்டாம். நிச்சயம் நம் ஒவ்வொருவருக்கும் நெருக்கமான வட்டம் என ஒன்று இருக்கும். அதில் உங்களுக்கு மிக நெருக்கமானவரிடத்தில் உங்களது பிரச்னைகளை மனம் விட்டு சொல்லலாம். எல்லா பிரச்னைக்கும், எல்லாரிடத்திலும் தீர்வு இருக்காது தான். ஆனால் பிரச்னைகளை மனம் விட்டு பேசினாலே மனது லேசாகும்.
சாதாரண குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்து, பல வருட போராட்டம், வலிகளை தாண்டி தான் பெற்ற வெற்றியை, வாழ்க்கை முழுவதும் அனுபவிக்காமல் இப்படியான விபரீத முடிவை சித்ரா எடுத்தது, அவரைப் பற்றி பெர்சனலாக தெரியாதவர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் கண்கூடாக காண முடிகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.