பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மி டூ என்ற பிரச்சாரம் ஒன்று இந்தியா முழுவதும் சூடு பிடித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுயை மி டூ (அதாவது நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்) என்று பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூற, விவகாரம் பெரிதானது. தொடர்ந்து மற்ற பெண்கள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகளையும் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
தொடர்ந்து நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குநர் சுசி கணேசன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
நடிகர் அர்ஜூன் மீதும் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டினை முன் வைத்தார். இதனடிப்படையில், அர்ஜூன் மீது பெங்களூரு போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சினிமாவில் எனக்கும் பாலியல் சீண்டல்கள் இருந்தன. பிரபல இயக்குனர் ஒருவர் என்னை படுக்க அழைத்தார் என்று பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து யாஷிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு நான் சென்றிருந்தேன். அப்போது, 'ஒருநாள் இரவு அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால், வாய்ப்புத் தருகிறேன்' என்று எனது தாய் மூலம் அந்த இயக்குனர் சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த இயக்குனர் யார் என்று சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், என்னிடம் நேரடியாக அவர் இதை கேட்கவில்லை. எனவே மீ டூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். சினிமா துறை மட்டுமில்லாது, எல்லா துறையிலும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் இருக்கின்றது" என்று தெரிவித்துள்ளார்.