Amitabh Sinha
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், அதன்காரணமாக நிகழும் மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போதைய நிலையில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஜூன் 11ம் தேதி மட்டும் தேசிய அளவில், கொரோனா பாதிப்பிற்கு 357 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை ஒரேநாளில், 294 பேர் மரணமடைந்திருந்தது அதிகபட்சமாக இருந்தநிலையில், நேற்று 350 என்ற அளவை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதத்திற்கு முன்னதாக நாள் ஒன்றுக்கு 100 மரணங்கள் நிகழ்ந்துவந்த நிலையில், கடந்த மாத்தில் மட்டும் சராசரியாக 190 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மே 11ம் தேதி நிலவரப்படி, 2,206 என்ற அளவில் இருந்த மரணங்களின் எண்ணிக்கை, ஜூன் 11ம் தேதி 8,102 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் இறங்குமுகத்தில் உள்ளது. இருந்தபோதிலும், கடந்த மாதத்தில் இறப்பு விகிதம் 3.29 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது அது 2.83 சதவீதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பால் தேசிய அளவில் நிகழ்ந்துள்ள மரணங்களில், 75 சதவீதத்துக்கும் மேலா மரணங்கள், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதத்தில், இந்த 3 மாநிலங்களில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை, மொத்த மரணங்களில் 65 சதவீதம் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் சமீபகாலமாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்து வருகிறது. மே 11ம் தேதி 73 ஆக இருந்த டெல்லியில் மரணங்களின் எண்ணிக்கை, தற்போதைய நிலையில், 1,085 ஆக அதிகரித்துள்ளது.
மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் போதிய கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனைகளில், இறந்த சடலங்களின் அருகிலேயே, தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு நிலவிவருவதால் அங்கு அருகருகில் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மயானங்களில் இடமில்லாததால், சடலங்களை அடக்கம் செய்ய முடியாமல், மருத்துவமனைகளிலேயே அவைகள் தேங்கியுள்ளன.
கொரோனா பாதிப்பால் ஏற்படும் மரணங்களை,சில மாநிலங்கள் வேண்டுமென்றே மறைத்து வருகின்றன. உதாரணமாக, மேற்குவங்க மாநிலத்தில், ஏப்ரல் மாத பிற்பகுதியில் 30 மரணங்களே நிகழ்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிகழ்ந்த 72 மரணங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின் அவை கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதேநிலைதான் டெல்லியிலும் நிகழ்ந்தது. அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கையை காட்டிலும், இரண்டு மடங்கு அளவிற்கு அங்கு மரணங்கள் நிகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 11ம் தேதி, தேசிய அளவில் ஒரேநாளில் 10,800 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. மகாராஷ்டிராவில் முதன்முறையாக ஒரேநாளில் அதிகபட்சமாக 3,500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.