கடந்த மார்ச் மாதம், கொரோனா நோய்ப் பரவல் கண்டறியப்பட்டதில் இருந்து, முதன் முறையாக டெல்லி, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் மனிதக் கடத்துதல் அளவு, தற்போது 1-க்கும் குறைவாக உள்ளது. இத்தகைய ஒரு சூழல், ஒரு சமூகத்தில் பரவல் விகிதம் குறையத் தொடங்கியது என்பதை தெரியப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட ஒரு நபரால் சராசரியாக எத்தனை புதிய பாதிப்புகளை உருவாக்க முடியும் என்பதை மனித கடத்துதல் அளவு (R0 ) விளக்குகிறது.
50,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி வரும் நிலையில், சென்னை கணித அறிவியல் கழகத்தின் சீதாப்ரா சின்காவின் சமீபத்திய கணிப்புகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும் , இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்களும் உள்ளன. உதாரணமாக, டெல்லியில் மட்டும் தான், மனிதக் கடத்துதல் அளவு 1 க்கு கீழே குறைந்து காணப்படும் போக்கு சில காலங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளப்பட்டது. எனவே, டெல்லிக்கு மட்டுமே எதிர்கால சூழ்நிலை குறித்து சில நம்பகமான மதிப்பீடுகளைச் செய்ய முடியும். இயல்பான மாறுபாடுகளின் ஒரு பகுதியாக மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் R0 -மதிப்புகள், தற்போது குறைந்து காணப்படுகிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 க்குக் குறையக்கூடும் என்று சின்காவின் மதிப்பீடு தெரிவிக்கின்றது. டெல்லியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, டெல்லியில் 10,600 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நினைவில் கொள்ள வேண்டிய மற்றோரு முக்கிய விஷயம் என்னவென்றால், இவை கடந்த கால தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத்திற்கான மதிப்பீடுகள். நிலைமை எவ்வாறு உருவாகும் என்பது குறித்த சில அனுமானங்களைப் பயன்படுத்தி இந்த மதிப்பீடுகள் பெறப்பட்டுள்ளன. உண்மை நிலை அனுமானங்களை விட்டு விலகிச் சென்றால், முடிவுகள் மதிப்பீடுகளிலிருந்து வேறுபடும். மனிதக் கடத்துதல் அளவே (R0) உயர்நிலை கணித மாதிரிகள் மற்றும் அனுமானங்களைப் பொறுத்தது. வெவ்வேறு ஆராய்ச்சி குழுக்கள் வெவ்வேறு R0 மதிப்புகளை கணக்கிடுகின்றன.
இந்த மதிப்பீடுகள், குறிப்பாக டெல்லி விஷயத்தில் ஆச்சரியப்படுத்தவில்லை. ஜூன் கடைசி வாரத்திலிருந்து நோய்த் தொற்று மேலாண்மையில் குறிப்பிடத்தக்க வெற்றியை டெல்லி அடைந்து வருகிறது. கடந்த மாதத்தில், பெரும்பாலான நாட்களில், புதிய பாதிப்புகளை விட நோய்த் தொற்றில் இருந்து குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. டெல்லியின் இந்த முன்னேற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க இரண்டு காரணங்களை முன்வைக்கலாம்.
முதலாவதாக, ஜூன் நடுப்பகுதியில் இருந்து கொரோனா பரிசோதனை எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டது.
இரண்டாவதாக, பாதிக்கப்பட்டவர்கள் திறம்பட அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஒரு நபர் குறைந்த புதிய பாதிப்புகளை உருவாக்கும் சூழல் ஏற்பட்டது. உண்மையான தொற்றுதல் அளவை செயற்கையாகக் குறைத்து, பரவுதல் விகிதமும் அங்கு குறையத் தொடங்கியது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், மேற்கூறிய இந்த இரண்டு காரணங்கள் பொருந்தும். ஆனால், மற்ற மாநிலங்களில் இருந்து பெறப்படும் முடிவுகள் டெல்லி போன்று சொல்லத்தக்க வகையில் இல்லை. எவ்வாறாயினும், தொடர்ச்சியான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தடுப்புக்காப்பு போன்ற நடவடிக்கைகள் மும்பையின் தாராவி பகுதியில் நன்கு பலனளித்ததாக கூறப்படுகிறது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் கொரோனா வளர்ச்சி விகிதம் அதிகரித்து காணப்படுவதுடன், இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் உயர்த்தி வருகின்றன.
சின்காவின் மதிப்பீட்டில், ஆந்திரா மாநிலத்தின் R0- மதிப்பு தற்போது 1.48 என்ற அளவில் உள்ளது. இந்தியாவின், தேசிய R0 சராசரி மதிப்பு 1.16 மட்டுமே. அதாவது ஆந்திராவில், பாதிக்கப்பட்ட 100 பேர் சராசரியாக, மேலும் 148 நபர்கள் வரை பாதிப்படையச் செய்கிறார். ஜூலை மாதத்தில் மட்டும், அதன் மொத்த கொரோனா பாதிப்பு ஒன்பது மடங்காக அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் 10,000-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்த வந்த ஆந்திரா, வெள்ளிக்கிழமை 9,200 புதிய நோய்ப் பாதிப்புகளை பதிவு செய்தன. மாநிலத்தின் மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தைத் தாண்டியது. குணமடைந்தவர்களின் விகிதமும் இங்கு குறைந்து காணப்படுகிறது.
கர்ந்தகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் நாளொன்றுக்கு 5,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை உறுதி செய்தி வருகின்றன. அதே நேரத்தில், உத்தரபிரதேசம், பீகார் ஆகியவை தினமும் சுமார் 3,500 பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.